டெல்லி: ஏகான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் 26, 2019 வியாழக்கிழமை அன்று இந்தியாவின் முன்னணி பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, இனி பேடிஎம் நிறுவனத்தின் செயலிகள் வழியாக, ஏகான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தன் இன்சூரன்ஸ் பாலிசி திட்டங்களை விற்குமாம்.
உலக அளவில் இன்சூரன்ஸ் வியாபாரத்தில் டெக்னாலஜியை அதிகம் பயன்படுத்தி வியாபாரம் செய்வதில் முன்னணியில் இருக்கிறது இந்த ஏகான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம். அதற்கு ஒரு நல்ல உதாரணமாக இப்போது பேடிஎம் வழியாக தன் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கப் போகிறார்கள்.
ஏகான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி வினித் அரோரா பேசும் போது, "பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு என்றே பிரத்யேகமான இன்சூரன்ஸ் பாலிசிகள் உடன், வழக்கமான பாலிசிகளையும் பேடிஎம் வழியாக விற்க இருக்கிறோம். ஒருவர் இனி இன்சூரன்ஸ் எடுப்பது மிகவும் எளிதான வேலையாக இருக்க வேண்டும், அது தான் எங்கள் நோக்கம்" எனச் சொல்லி இருக்கிறார். அதோடு இந்தியாவில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையையும் அதிகமாகும் எனவும் சொல்லி இருக்கிறார்.
ஏகான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் பேடிஎம் நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் மொத்த இன்சூரன்ஸ் பணிகளும் டிஜிட்டல் மயமாக இருப்பதால், ஒரு சில நிமிடங்களில் ஒருவரால் தனக்குத் தேவையான இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்து விட முடியும், அடுத்த சில நிமிடங்களில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு இன்சூரன்ஸ் பாலிசி டாக்குமெண்டுகளும் அனைத்தும் அனுப்பி வைக்கப்படும் எனவும் சொல்லி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
"இந்த கூட்டு முயற்சியால், டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் அதிக அளவில் விற்கப்படும். இனி இன்சூரன்ஸ் எடுப்பதற்கு எதையாவது சாக்கு போக்கு சொல்லி தள்ளிப் போடுவதும் பெரிய அளவில் குறையும்" எனச் சொல்லி இருக்கிறார் வினித் அரோரா. வழக்கமாக லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தங்கள் பாலிசி வியாபாரத்தில், ஏஜெண்ட்களைத் தான் நம்பி களம் இறங்குவார்கள். ஆனால் ஏகான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தன் வியாபாரத்தை அதிகரிக்க, முழுமையாக டெக்னாலஜியையும், டிஜிட்டல் களங்களையுமே நம்பி களம் இறங்கி இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
சமீபத்தில் பார்தி ஏர்டெல் கூட, ஆக்ஸா நிறுவனத்துடன் சேர்ந்து ரீசார்ஜ் செய்யும் போதே 4 லட்சம் ரூபாய்க்கு, ஒரு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க முடியும் என்கிற விதத்தில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.