டெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான பாரத ஸ்டேட் வங்கி தற்போது கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 8.05%மாக குறைத்துள்ளது.
இந்த குறைப்பு வட்டி விகிதமானது அக்டோபர் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரெப்போ விகிதம் குறைப்பின் பலனை வங்கிகள் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில்லை என கருதிய ரிசர்வ் வங்கி, மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் எனப்படும் எம்.சி.எல்.ஆர் முறையை கடந்த 2016 ஏப்ரல் முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
வட்டி வருவாய் குறையும்
இந்த எம்.சி.எல்.ஆர் முறை அமல் செய்யப்பட்ட பிறகு பேஸ்ரேட் வாடிக்கையாளர்கள் புதிய முறைக்கு மாறிக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும், பேஸ்ரேட் முறையில் இருந்து வாடிக்கையாளர்களை புதிய முறைக்கு மாற்றுவதில் வங்கிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் இந்த பேஸ்ரேட் முறையில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதே இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பேஸ்ரேட் முறையில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அதிக வட்டி விகிதத்தில் தவணை செலுத்தி வருகின்றனர். இந்த இடைவெளியை குறைக்கும் வகையில் இரண்டு முறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை குறைக்கும் போது வட்டி வருவாய் குறையும் என்பதால் பிற வங்கிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
6 முறை வட்டி குறைப்பு
இந்த நிலையில் எஸ்.பி.ஐயின் இந்த வட்டி விகிதத்திற்கான நடைமுறை மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் நடப்பு 2019 - 2020 ஆண்டில் இது ஆறாவது முறையாக இந்த எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதம் குறைப்பு செய்துள்ளது. இந்த வட்டி விகித முறையானது ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றம் கொண்டு வரப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே வாடிக்கையாளர்களுக்கு செல்ல இது வழி வகுக்கிறது. இதன் மூலம் மக்கள் வட்டி குறைப்பின் பலனை மக்கள் உடனே பெற முடிகிறது.
வாடிக்கையாளர்களுக்கு பயன்
ஏற்கனவே இவ்வங்கியின் வாடிக்கையாளர்களாக இருப்பவர்களும் சரி, புதியதாக கடன் வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, இந்த எம்.சி.எல்.ஆர் முறையில் பயன் அடைவார்கள் என்றும், குறிப்பாக இந்த பண்டிகை கால சீசனில் இது நன்றாகவே கைகொடுக்கும் என்றும், பழைய வாடிக்கையாளர்களுக்கு இ.எம்.ஐ குறையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திருவிழா பருவத்தை குறி வைக்கும் எஸ்.பி.ஐ
திருவிழா பருவத்தை குறி வைத்து பல்வேறு சலுகளை வழங்கி வரும் எஸ்.பி.ஐ, இந்த திருவிழா பருவத்தில் மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தான் கடன்களுக்கான குறைந்த பட்ச வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. எஸ்.பி.ஐ ஏற்கனவே வீட்டுக் கடன்களுக்கு அளித்துள்ள நிலையில், தற்போது மற்ற சில்லறை கடன்களுக்கும் வட்டி விகிதம் குறையும் என்றும், இது ஏற்கனவே கடன் வாங்கியவர்களாக இருந்தாலும் சரி, புதிதாக கடன் வாங்குபவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.