வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கவலை.. ஹோம் லோன் பெற்று சொந்த வீடு வாங்கியவர்களுக்கு கடனை எப்படி செலுத்துவது? என்ற கவலை. இப்படி ஒவ்வொரு தரப்பினருக்கும் சில பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் எல்லோருடைய மனதிலும் இருக்கும் ஒரே ஒரு கேள்வி என்ன தெரியுமா? தொடர்ந்து வாடகை செலுத்திக்கொண்டு வாடகை வீட்டில் இருந்து விடலாமா? இல்லை ஹோம் லோன் பெற்று சொந்த வீடு வாங்கி விடலாமா? என்பதுதான். இந்த கேள்விக்கு ஒரு சின்ன ஃபார்முலாவை பயன்படுத்தி விடை தெரிந்து கொள்ளலாம்.
20x ஃபார்முலா: வீட்டின் விலை எவ்வளவு?, அதற்கு கிடைக்கும் வாடகையின் மதிப்பு எவ்வளவு? என்பதை ஒப்பிட்டுப் பார்க்க இந்த விதி உதவியாக இருக்கும். அதாவது ஆங்கிலத்தில் "பிரைஸ் டூ ரெண்ட் ரேஷியோ" என்று சொல்லப்படுகிற வீட்டு விலை மற்றும் வாடகை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஃபார்முலா உருவாக்கப்பட்டுள்ளது.
20x ஃபார்முலாவைப் பயன்படுத்துவது எப்படி?: நீங்கள் ஒரு வீட்டை வாங்கிவிடீர்கள் என வைத்து கொள்ளவோம். அந்த வீட்டை வாடகைக்கு விட்டால் ஓராண்டுக்கு எவ்வளவு வாடகை கிடைக்கும்? என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிய வீட்டின் விலை எவ்வளவு என்பதையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

20x விதி = நீங்கள் வாங்கிய வீட்டின் விலை/ ஆண்டு வாடகை (மாதாந்திர வாடகை × 12)
இந்த ஒரு ஃபார்முலாவை பயன்படுத்தினால் எத்தனை ஆண்டுகளுக்கு தொடர்ந்து வாடகை பெற்றால் நீங்கள் வாங்கிய வீட்டின் விலைக்கு சமமான தொகை கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதில் நீங்கள் செலுத்தும் ஈஎம்ஐ, வரி, மெயின்டனன்ஸ் செலவுகள் ஆகியவை அடங்காது. இருந்தாலும் இதை வைத்து ஒரு ஐடியாவைப் பெற முடியும்.
20x பார்முலாவைப் பயன்படுத்தி கிடைக்கும் விடை 20-ஆக இருந்தால் நீங்கள் வாங்கிய வீட்டின் தொகையும் அதன் வாடகை மதிப்பும் நியாயமாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பார்முலாவில் 20-க்கு மேல் விடை வந்தால் வாடகையோடு ஒப்பிடும்போது வீட்டின் விலை அதைவிட சற்று அதிகம் என்று பொருள். இது போன்ற சமயங்களில் வாடகை வீட்டில் இருப்பதே லாபகரமானதாக இருக்கும்.
உதாரணமாக ஒரு வீட்டின் விலை ரூ.60 லட்சம் என வைத்துக்கொள்வோம். அதற்கு மாதா மாதம் ரூ. 25,000 வாடகை கிடைக்கிறது என்றால், வருடாந்திர வருமானம் ரூ.3 லட்சமாக இருக்கும். இதை வைத்து கணக்கிட்டால் விடை 20 வரும். நீங்கள் வாங்கிய வீட்டின் விலையும், அதற்கு கிடைக்கும் வாடகையும் சமமாக இருக்கிறது என்று பொருள்.
அதுவே நீங்கள் ஒரு வீட்டை 80 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறீர்கள். அதற்கு வருடாந்திர வருமானமாக ரூ.3 லட்சம் கிடைக்கிறது என்றால்.. பார்முலாவை வைத்து கணக்கிடும்போது ரூ.26.7 என்ற எண் வரும். இந்த விகிதம் 20-ஐ விட அதிகமாக இருப்பதால்.. நீங்கள் வாங்கிய வீட்டின் விலை அதிகமாக இருக்கிறது என்று பொருள். இது போன்ற சமயங்களில் நீங்கள் சொந்த வீட்டை வாங்குவதை விட வாடகை வீட்டில் இருப்பது லாபகரமானதாக இருக்கும்.
வீடு வாங்க இந்த ஒரு ஃபார்முலாவை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? என்றால் அப்படி எல்லாம் இல்லை. நீங்கள் ஆரம்பத்தில் வாடகை வீட்டில் இருக்கலாமா? அல்லது சொந்த வீடு வாங்கலாமா என குழம்பிக் கொண்டிருந்தால் அதற்கான ஒரு ஐடியாவை பெற இந்த விதி உதவும். அதுவும் சிலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக வாடகை கொடுத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சொந்த வீடு வாங்குவது சரியான தேர்வாக இருக்கும்.
ஆனால் சிலர் அடிக்கடி வேலை மாற்றம் காரணமாக ட்ரான்ஸ்ஃபர் ஆகிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் ஒரு இடத்தில் வீடு வாங்கி விட்டால் அதை வாடகைக்கு விட்டால் மட்டுமே லாபமாக இருக்கும். எனவே உங்களுடைய நிதி இலக்குகள் மற்றும் தனிப்பட்ட தேவை போன்றவற்றையெல்லாம் கணக்கிட இந்த பார்முலா உதவிகரமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
