இன்றைய காலக்கட்டத்தில் அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வது என்பது மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. இது லாபகரமான திட்டங்களாகவும் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இன்றைய காலகட்டங்களில் வங்கி வட்டியை விட அஞ்சலகத்தில் அதிகம். இன்று நாம் 3 திட்டங்களை பற்றி பார்க்கவிருக்கிறோம்.
இந்த திட்டங்களில் தற்போதைய வட்டி விகிதம் என்ன? எப்படி முதலீடு செய்வது? எப்படி இந்த திட்டங்களில் இணைவது? யாரெல்லாம் இணையலாம்? வரி சலுகைகள் உண்டா? வேறு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தொடர் வைப்பு நிதி திட்டம்
முதலில் நாம் பார்க்கவிருப்பது அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி பற்றித் தான். வங்கிகளுடன் ஒப்பிடும்போதும் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம். தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 5.8% ஆகும். இந்த திட்டத்தில் வருடத்தில் 4 முறை, அதாவது காலாண்டுக்கு ஒரு முறை வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் இணையும்போது என்ன வட்டி விகிதமோ? அதே வட்டி தான் இந்த திட்டம் முடிவடையும் வரையில் கிடைக்கும். இந்த திட்டத்தில் மட்டும் தான் இந்த வட்டி விகித முறை உள்ளது.
RD- குறைந்தபட்ச முதலீடு
தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்ச 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். இதனை பெரியவர்கள் தனியாக தொடங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லையெனில் ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். இதே 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள், இந்த கணக்கினை பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
முதிர்வு காலம்
RD- இது ஒரு 5 ஆண்டு திட்டம். இந்த திட்டத்தினை முன் கூட்டியே சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும் முடித்துக் கொள்ளலாம். எனினும் 3 வருடத்திற்கு பிறகு முடித்துக் கொள்ளலாம். அப்படி முடித்துக் கொள்ளும் போது சேமிப்பு கணக்குக்கு என்ன வட்டியோ அது தான் கிடைக்கும். அதேபோல முதிர்வுக்கு பிறகும் நீட்டித்துக் கொள்ளலாம். இதனை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். எனினும் இதன் முதிர்வுகாலம் 5 வருடமாகும்.
RD- ல் மாதம் ரூ.1500 முதலீடு
RD- ல் மாதம் 1500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 1 வருடத்திற்கு 18,000 ரூபாய் வீதம், 5 வருடத்திற்கு 90,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். வட்டி விகிதம் 14,545 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் 5 வருடம் கழித்து முதிர்வு தொகையாக உங்களிடம் 1,04,542 ரூபாய் கிடைக்கும். அஞ்சலகத்தில் குறைவான காலம் உள்ள திட்டங்களில் இதுவும் ஒன்று.
சுகன்யா சம்ரிதி யோஜனா
அடுத்ததாக நாம் இன்று பார்க்கவிருப்பது சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டம் தான். அஞ்சலக திட்டங்கள் மிக சிறப்பானதொரு திட்டமாகும். இது பெண் குழந்தைகளுக்கான திட்டமாகும். அவர்களின் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரையில், முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள். எனினும் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும், அந்த கணக்கு தானாகவே மூடப்படும். இதற்கான வட்டி விகிதம் தற்போதைய நிலவரப்படி 7.6% ஆகும்.
SSY - குறைந்தபட்ச முதலீடு
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம். நீங்கள் இந்த கணக்கினை தொடங்கியதில் இருந்து, குறைந்தது 15 வருடத்திற்கு இந்த தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இதில் கூட்டு வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
SSY - வயது வரம்பு
இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும். இதற்கு வயது கட்டாயம் 10 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும்.
SSY -ல் மாதம் முதலீடு
- SSY - திட்டத்தில் மாதம் ரூ.1500 முதலீடு
- 15 ஆண்டுகள் - ரூ.2,70,000
- வட்டி விகிதம் 7.6%
- வட்டி வருவாய் - ரூ.5,21,168
- முதிர்வு தொகை - ரூ.2,70,000+ 5,21,168= ரூ.7,91,169
- பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதி
மூன்றாவதாக நாம் பார்க்கவிருப்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பற்றித் தான். இந்த திட்டத்தில் தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயாகும். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதனை மொத்தமாகவும் செலுத்தலாம். அல்லது மாத மாதமும் முதலீடு செய்யலாம்.
PPF - வரிச் சலுகை
பிஎஃப் வட்டி விகிதம் ஒவ்வொரு மாதத்தின் 5ம் தேதி முதல் கடைசி நாள் வரை, ஒரு நபரின் கணக்கில் குறைந்தபட்ச நிலுவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. PPF திட்டத்தில் ஒரு தனி நபர் ஒரு கணக்கினை மட்டும் தொடங்கிக் கொள்ளலாம். இதே இருவர் இணைந்து ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம்.இந்த திட்டத்தில் வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில், வரி விலக்கு உண்டு. அதேபோல பிபிஎஃப் திட்டத்தின் மூலம் முதிர்வு தொகைக்கும் வரி விலக்கு உண்டு.
PPF - முதிர்வு காலம்
திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். அதற்கு மேற்கொண்டு இந்த கணக்கினை 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ளலாம்.கணக்கினை தொடங்க 500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கும் கீழாக இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டால், இந்த கணக்கு ப்ரீஸ் செய்யப்படும். இதற்கு வருடத்திற்கு 50 ரூபாய் அபராதம் உண்டு.
PPF - முதலீடு
இந்த திட்டத்தில் மாதம் முதலீடு - ரூ1500
வட்டி விகிதம் - 7.1%
15 வருடம் டெபாசிட் - ரூ.2,70,000
வட்டி விகிதம் - 7.1%
வட்டி வருவாய் - ரூ.2,18,185
முதிர்வு தொகை - ரூ.4,88,185