அவசரமாக கடன் தேவைப்படும் நேரங்களில் யாரிடம் கடன் கேட்பது? எப்படி வாங்குவது? அடுத்து என்ன செய்வது என்பதே பலரின் குழப்பமாக இருக்கும்.
இப்படி, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்கள் ஏராளம். ஆனால் அப்படியானவர்களுக்கு சில ஐடியாக்களை தருவது தான் இந்த கட்டுரை.
சரி வாருங்கள் பார்க்கலாம். அவசர தேவைக்கு எப்படி எல்லாம் கடன் பெறலாம் என்று.
எளிதாக கிடைக்கும் பர்சனல் லோன்
நம் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது பர்சனல் லோன் எனப்படும், தனிநபர் கடன் தான். இந்த பர்சனல் லோனிற்கு பெரிய ஆவணங்கள் தேவையில்லை. நல்ல கிரெடிட் ஸ்கோர், சம்பள கணக்கு அல்லது வருவாய்க்கான ஆவணம். இது போதும். அதிலும் நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் எளிதாக கடன் கிடைக்கும்.
கிரெடிட் கார்டு மூலம் பணம்
வேறு வழியில்லை என்ற நிலையில் மட்டும் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக எடுக்கப்பட்ட தொகையில் 2.5 - 3% தொகையை கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும். அதோடு எப்போது பணம் எடுத்தீர்களோ அப்போதிலிருந்தே, வங்கிகள் வட்டி போட ஆரம்பித்துவிடும். நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கினால் கட்டணம் கிடையாது. ஆனால் பணமாக எடுத்தால் கட்டணம் உண்டு. ஆக இந்த வழியை நீங்கள் தேர்தெடுக்கும் முன் ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும்.
பேடே லோன் (payday loan)
இன்றைய காலகட்டத்தில் பிரபலமாகி வரும் கடன்களில் பேடே-வும் ஒன்று. இது தற்காலிகமாக உங்களுக்கு பணம் தேவை என்றாலோ அல்லது உங்களுக்கு மாத சம்பளம் கிடைப்பதில் தாமதம் என்றாலோ இந்த லோனினை அணுகலாம்.
இந்த கடனை வாங்கும் ஒருவர் தனக்குச் சம்பள பணம் கிடைத்தவுடன் தான் வாங்கிய தொகை அல்லது அதன் பகுதியை கட்டணம் மற்றும் வட்டியோடு கட்ட வேண்டும். இந்த பேடே கடனை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனை எளிதில் வாங்க முடியும். சரியான ஆவணங்களை கொடுக்கும் பட்சத்தில் சில மணி நேரங்களில் இந்த கடனை பெற முடியும். ஆனால் இந்த வகையாக கடன்களில் வட்டி விகிதம் மிக அதிகம். ஆக இதனை மனதில் கொண்டு வாங்குவது நல்லது.
கார் கடனை அணுகலாம்
இந்த வகையான கடனை பெற சிபில் ஸ்கோர் தேவையில்லை. ஏனெனில் பிணையமாக உங்களது வாகனத்தினை வைத்துக் கொண்டே இந்த கடன் அளிக்கப்படுகிறது. ஆக குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் கட்டி விட்டால், உங்களது பொருள் உங்களுக்கு. இல்லையெனில் உங்களது பொருளை விற்பனை செய்து கடனை எடுத்துக் கொள்வார்கள். ஆக இதனை கவனத்தில் கொள்வது அவசியம்.
தங்கத்தின் மீது கடன்
மிக எளிதாக குறைந்த நேரத்தில் பெறும் கடன் தான் இந்த நகைக்கடன். இதில் உங்களது நகையை பிணையமாக வைத்துக் கொண்டு கொடுப்பார்கள். இதன் மூலம் உங்களது அவசர தேவைக்கு கடன் பெற முடியும். பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு நகைக்கடனை கொடுத்து வருகின்றன.
கூட்டுறவு வங்கிகள் கூட நகைக்கடனுக்கு பல சலுகைகளை அளித்து வருகின்றன. மற்ற வங்கிகள் நிதி நிறுவனங்களோடு ஒப்பிடும்போது வட்டி அதிகம். ஆக இதனை உங்களின் அவசர தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.