பொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே வீண் செலவு என்ற கண்ணோட்டம் போய் தற்போது தான், இது ஒரு அவசியமான ஒன்று என்பது பலருக்கும் புரிய வந்துள்ளது எனலாம். இதற்கு மிக முக்கிய காரணம் கொரோனா எனலாம்.
எந்த சமயத்தில் என்ன நிகழுமோ என்ற அச்சத்திற்கும் மத்தியில் நம் உயிரினும் மேலான, உறவுகளை இழந்து தவித்த இந்த காலகட்டத்தினை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. எத்தனை எத்தனையோ குடும்பங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து நிர்கதியாய் நின்ற காலகட்டத்தில், இன்சூரன்ஸ் என்பது நிதி ரீதியாக எந்தளவுக்கு கைகொடுத்தது என்பது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே புரிந்திருக்கும்.
இது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆக இன்சூரன்ஸ் பற்றிய அவசியத்தினை இனியேனும் உணர்ந்து நாம் நமக்காக இல்லாவிட்டாலும், நம்மை சார்ந்திருப்பவர்களுக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒருவர் எடுக்க வேண்டிய அவசியமான இன்சூரன்ஸ் திட்டங்களைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பாதுகாப்பு கவசம்
பொதுவாக இன்சூரன்ஸ் என்பது நம்மையும், நம்மை சார்ந்திருப்பவர்களையும், தவிர்க்க முடியாத அவசர காலக்கட்டங்களில் பாதுகாப்பு அளிக்க கூடிய பாதுகாப்பு கவசங்களாக உள்ளன. குடும்பத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கக் கூடிய நபர் இல்லாத சமயம், அந்த குடும்பம் எந்தளவுக்கு பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை பலரும் கண்கூடாக பார்த்திருக்கலாம். ஆக அந்த சமயத்தில் குறைந்தபட்சம் நிதி ரீதியில் ஆவது இன்சூரன்ஸ்கள் கைகொடுக்கும்.
டெர்ம் அஷ்யூரன்ஸ்
டெர்ம் இன்சூரன்ஸ் அல்லது டெர்ம் அஷ்யூரன்ஸ் என்பது ஒரு வகையான ஆயுள் காப்பீடாகும். இந்த பாலிசியில் பாலிசிதாரர் இறப்பிற்கு பிறகு பெரும் பலன் உண்டு. மற்ற இன்சூரன்ஸ் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இதில் பிரீமியம் மிக குறைவு. இதில் நீங்கள் செலுத்திய பிரீமியத்திற்கான மதிப்பு திரும்ப கிடைக்காது. எனினும் இறப்பு பலன் மிகப்பெரியதாக இருக்கும். இந்த பாலிசியில் பாலிசிதாரரின் உடல் நலம், ஆயுட்காலத்தின் அடிப்படையில் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகின்றது.
ஹெல்த் இன்சூரன்ஸ்
மனிதர்களுடைய வாழ்வில் நோய் நொடி என்பது தவிர்க்க இயலாத ஒரு அம்சமாக உள்ளது. அதிலும் தற்போதைய காலகட்டத்தில் புதிய புதிய நோய்கள் பரவி வருகின்றன. ஆக எப்போது யாருக்கு என்ன பிரச்சனை வரும் என்பதை கணிக்க இயலாது. ஆக அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதிலும் பேமிலி ப்ளோட்டர் போன்ற பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் குடும்பமே இதனால் பயனடைய முடியும்.
தனிநபர் விபத்து காப்பீடு
இந்த தனி நபர் விபத்து காப்பீடுகள், விபத்தால் ஏற்படும் மரணம் அல்லது விபத்தால் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கு இழப்பீடு கொடுக்கப்படுவதாகும். இதனை கவர் செய்யும் விதமாக பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா, இது மத்திய அரசு சாமனிய மக்களுக்காக அறிவித்த ஒரு இன்சூரன்ஸ் திட்டமாகும். இந்த திட்டத்தில் விபத்தில் ஒருவர் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ இழப்பீடு பெற முடியும். இதில் இறப்பு பலனாக 2 லட்சம் ரூபாயும், ஊனத்திற்கு 1 லட்சம் ரூபாயும் இழப்பீடாக பெற முடியும். இதற்கு வங்கிக் கணக்கில் இருந்து வருடத்திற்கு 12 ரூபாய் டெபிட் செய்யப்படும். ஆக இது போன்ற பல திட்டங்கள் சந்தையில் உள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஹோம் இன்சூரன்ஸ்
நீங்கள் வாடகை வீடோ அல்லது சொந்த வீடோ எதுவாக இருந்தாலும் சரி, உங்களது வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு திட்டமாகும். இது இயற்கை பேரிடர் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட முடியும். இதில் பலவகையான திட்டங்கள் உள்ளன. ஆக அதில் உங்களுக்கு தேவையான ஒன்றினை தேர்வு செய்து காப்பீடு செய்து வைக்கலாம்.
சைபர் இன்சூரன்ஸ்
சைபர் இன்சூரன்ஸ் என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். நிச்சயம் உண்டு. அதாவது உங்களது ஸ்மார்ட்போன், கணினி, கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பலவற்றிலும் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைத்திருக்கலாம். ஆக அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க சைபர் இன்சூரன்ஸ் போட்டு வைக்கலாம். பொதுவாக இது பெரியளவில் நிதி புழங்கும் ஒரு இடத்தில் அவசியமானதாக உள்ளது.
மோட்டார் இன்சூரன்ஸ்
மோட்டார் இன்சூரன்ஸ்களை பொறுத்தவரையில் கண்டிப்பாக மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸினை போடக் கூறுவதால் போட்டு வைக்கின்றனர். ஆனால் இதன் மூலம் மூன்றாம் நபர் மட்டுமே பயன் பெற முடியும். ஆனால் இதில் காப்பீட்டாளருக்கு எந்த காப்பீடும் கிடைக்காது. ஆக ஒன் டேமேஜ் பாலிசியினையும் எடுக்க வேண்டும். இதன் மூலம் தான் சொந்த சேதங்களுக்கு க்ளைம் செய்து கொள்ள முடியும். இது இரண்டையும் கவர் செய்யும் விதமாக விரிவான காப்பீடுகளும் உள்ளன. ஆக அவற்றை தேர்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications