மத்திய அரசு ஊழியர்களுக்கான வீடு கட்ட அல்லது பிளாட் வாங்க (HBA - house Building advance) என்ற சலுகை திட்டத்தினை மத்திய அரசு 52 லட்சம் ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றது.
இதன் மூலம் மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்கள் பயன்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டமானது கடந்த அக்டோபர் 2020ல் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் வீட்டுக் கனவு நனவாக இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். ஏனெனில் குறைவான வட்டியில் இதன் மூலம் ஊழியர்களுக்கு கடன் கிடைக்கும்.
முக்கிய அம்சங்கள்
அதெல்லாம் சரி இந்த திட்டத்தின் மூலம் ஒருவர் எவ்வளவு தொகையை முன் தொகையாக பெறலாம். இதனை எத்தனை ஆண்டுகளில் திரும்ப செலுத்தலாம். வட்டி விகிதம் என்ன? ஏற்கனவே வங்கிகளில் வாங்கியுள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியுமா? மற்ற விவரங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
எவ்வளவு வட்டி விகிதம்?
முன்னதாக இந்த HBA திட்டத்தின் மூலம் பெறப்படும் தொகைக்கு 9.5% வரையில் வட்டி இருந்த நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் 7.9% ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டம் மார்ச் 31, 2022 வரையில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்பதையும் ஊழியர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
எவ்வளவு தொகை பெறலாம்?
இந்த திட்டமானது கடந்த அக்டோபர் 2020ல் தொடங்கப்பட்டது. அதன் பிறகு செப்டம்பர் 2020ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதத்தினை குறைத்தார். ஒரு வீடு கட்ட அல்லது வாங்க அளிக்கப்படும் முன் பணத்தின் அதிகபட்ச வரம்பானது 25 ;லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை மாத தவணை முறையில் 20 ஆண்டுகளில் செலுத்திக் கொள்ளலாம்.
வேறு என்னென்ன சலுகைகள்?
மத்திய அரசில் பணிபுரியும் கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவர் மட்டும் வீடு வாங்க முன்பணம் பெற முடியும் என்ற முறை மாற்றப்பட்டு, இருவரும் இணைந்தோ அல்லது தனி பட்ட முறையிலோ பணம் பெறலாம் என வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வீட்டை விரிவுபடுத்தும் முறைக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிபந்தனைகள் எல்லாம் உண்டு
இதெல்லாவற்றுக்கும் மேலாக வங்கிகள் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன் தொகையை HBAவின் கீழ் மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு. எனினும் இந்த தொகையினை பெற சில நிபந்தனைகளும் உண்டு. குறிப்பாக நிரந்தர ஊழியர்கள் அல்லது தற்காலிக ஊழியராக இருந்தாலும் சரி, தொடர்ந்து 5 வருடம் பணியாற்றி இருந்தால் மட்டுமே இந்த சலுகையினை பெற முடியும். மேலும் சொந்த இடத்தில் வீடு கட்டுவது மிக அவசியம்.
அகவிலைப்படி நிறுத்தம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ-வினை அரசு நிறுத்தி வைத்தது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலும் என மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் இன்று முக்கிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்
அப்படி மாற்றம் செய்யப்பட்டால் டிஏ மற்றும் டிஆர் விகிதம் சேர்க்கப்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம். ஊதிய மேட்ரிக்ஸின் படி பார்த்தால், மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் 18000 ரூபாய் எனில், அவரது சம்பளம் 18000 * 2.57 = 46,260 ரூபாய் ஆகும். எப்படியிருப்பினும் DA, மற்றும் TA, மருத்துவ இழப்பீடு மற்றும் HRA போன்ற கொடுப்பனவுகளும் சேர்க்கப்படும் போது தான் முழுமையான சம்பளம் என்பது தெரிய வரும்.