நம் நாட்டில் அரசு வழங்கிய ஆவணங்களில் மிக முக்கியமானது ஆதார் கார்டு. ஆதார் கார்டு பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள அணையும் (UIDAI) 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை கேட்டுக் கொண்டுள்ளது. குழந்தையின் ஆதார் விபரங்களை துல்லியமாக பராமரிக்கவும், எந்த சேவை இடையூறும் இன்றி ஆதாரைப் பயன்படுத்தவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால் 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில் இலவசமாக பயோமெட்ரிக் அப்டேட் செய்ய முடியும். இன்றைய தினத்தை சேர்க்காமல் இன்னும் 20 நாட்கள் இருக்கிறது. இந்த காலக்கெடுவைப் பயன்படுத்தி குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பயனடையலாம்.

பயோமெட்ரிக் அப்டேட் எதற்காக செய்யப்படுகிறது?: குழந்தைகள் வளர வளர கருவிழி மற்றும் முக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். 5 வயதில் ஆதார் கார்டில் இருக்கும் விபரங்கள் அந்த குழந்தைக்கு 10 வயதாக இருக்கும் போது இருக்காது. இதை அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றி அமைப்பதற்காக தான் இந்த பயோமெட்ரிக் அப்டேட் செய்யப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் சமீபத்திய கை ரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் ஆதாரில் பதிவு செய்யப்படும்.
பயோமெட்ரிக் அப்டேட் அவசியம் தானா?: பயோமெட்ரிக் விபரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது மிக மிக அவசியம். குழந்தைகளுக்கு இது பல்வேறு விஷயங்களுக்கு உதவும். ஏனெனில் பின்வரும் சேவைகளை நீங்கள் கண்டிப்பாக ஆதார் கார்டு இன்றி செய்ய முடியாது. அதற்கு அந்தக் குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கு, போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு, அரசு திட்ட உதவிகளை பெறுவதற்கு, இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற என பல விஷயங்களுக்கு ஆதார் கார்டு தேவை.
யாரெல்லாம் இந்த அப்டேட்டை செய்ய வேண்டும்?: 5 முதல் 17 வயது குழந்தைகளை வைத்திருக்கும் அனைவரும் இந்த பயோமெட்ரிக் அப்டேட்டை கட்டாயம் செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் அப்டேட் செய்யும் போது ஒரு சில பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே செப்டம்பர் 30-ஆம் தேதி காலகெடுவுக்கு முன்னரே இதை முடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
எப்படி அப்டேட் செய்ய வேண்டும்?: 5 முதல் 17 வயதுடைய குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையோடு ஆதார் சேவை மையத்திற்கு செல்லலாம் அல்லது ஆதார் என்ரோல்மெண்ட் சென்டருக்கும் செல்லலாம். அங்கு குழந்தையின் கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படத்தை எடுத்துக் கொள்வார்கள். இந்த சேவையை நீங்கள் வருகின்ற செப்டம்பர் 30 வரை இலவசமாக செய்யலாம்.
அதன் பிறகு கட்டணம் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இன்று வரையில் எவ்வளவு கட்டணம் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம். பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்து எதிர்காலத்தில் அரசு சேவைகளை பெறும் போது ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications
