டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.
ஆக கொரோனா வைரஸ் தாக்கத்தினை குறைப்பதை நோக்கமாக கொண்டு பல வாரங்களாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அது கைகொடுக்காத நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசின் பல நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இதற்கிடையில் தற்போது பான் ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம், ஜூன் 30 வுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது அந்த கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
அதோடு கடந்த 2018-19ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 2019-20ம் ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக மார்ச் 31 வரையில் ஆதார் பான் இணைப்புக்கு காலக்கெடுவாக கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய நேரடி வரிகள் வாரியமும் (CBDT), ஆதார் எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கடந்த 2016-17ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் தங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் ஆதார் நம்பரை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அப்போது அறிவுறுத்தியது.
இதன் படி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த, இந்த சட்டத்தின் படி பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்க உத்தரவிடப்பட்டது. எனினும் இதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்ததால், பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது அடுத்த ஆண்டு மார்ச் 31 2021 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.