இந்தியாவில் அம்பானிக்கு அடுத்த பணக்காரர் யார் என்றால் அதானி என நாமே சொல்லத் தொடங்கிவிட்டோம். அந்த அளவுக்கு அதானி லாபம் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்.
அதானி குழும கம்பெனிகளில் பல கம்பெனிகள், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகின்றன. அதில் Adani Green Energy என்கிற கம்பெனியும் ஒன்று.
இந்தியாவில் சோலார் முறையில் மின்சாரத்தை தயாரித்து விற்பது தான் இந்த கம்பெனியின் முக்கிய வியாபாரம். தன் வியாபாரத்தை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது Adani Green Energy.
வியாபாரத்தில் டான்
தற்போது Adani Green Energy கம்பெனி தான் உலகின் மிகப் பெரிய சோலார் மின்சார கம்பெனி என அமெரிக்காவின் மெர்காம் கேப்பிட்டல் என்கிற கம்பெனி சொல்லி இருக்கிறது. Adani Green Energy கம்பெனியின் கெபாசிட்டி 14 ஜிகா வாட்டாக அதிகரித்து இருக்கிறதாம். 2025-ம் ஆண்டுக்குள் Adani Green Energy-ன் கெபாசிட்டி 25 ஜிகா வாட்டைத் தொடும் என்கிறது கம்பெனி தரப்பு.
பங்கு விலை அதிவேக உயர்வு
Adani Green Energy கம்பெனியின் பங்கு விலை, கடந்த 2.5 ஆண்டுகளில் மட்டும் சுமாராக 2,500 சதவிகிதம் (25 மடங்கு) விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. இந்த பங்கில் எவ்வளவு ரூபாய் முதலிடு செய்து இருந்தால் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் இந்த பங்கில் முதலீடு செய்து இருக்கிறார்களா? என்பதை எலாம் விரிவாகப் பார்ப்போம். முதலில் பங்கு விலை ஏற்றத்தில் இருந்து தொடங்குவோம்.
கோடீஸ்வரன் தான்
கடந்த ஜூன் 2018-ல் தான் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. 2.7.18 அன்று கொஞ்சம் விலை சரிந்து 25.20 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்று 4 லட்சம் ரூபாய்க்கு அதானி கிரீன் பங்குகளை வாங்கி, 670.80 ரூபாய்க்கு வர்த்தகமான போது விற்று இருந்தால் 25.61 மடங்கு லாபம் பார்த்து இருக்கலாம். 1.02 கோடி ரூபாயை லாபமாகச் சம்பாதித்து இருக்கலாம்.
அடுத்த சூப்பர் வாய்ப்பு
கடந்த 19.2.19 அன்று 30.8 ரூபாய்க்கு வர்த்தகமானது அதானி கிரீன் எனர்ஜி. அன்று முதலீடு செய்து, நேற்று அல்லது இன்றைக்கு 670.80 ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தால் 20.7 மடங்கு (2,077 சதவிகிதம்) லாபம் பார்த்து இருக்கலாம். கிட்டத்தட்ட 1.5 வருடத்துக்குள் 20.7 மடங்குலாபம் என்பது மிகப் பெரிய வாய்ப்பு.
மே 2019-ல் ஒரு சான்ஸ்
சரி அதையும் மிஸ் செய்துவிட்டீர்களா? இதோ 17.5.19 அன்று ஒரு சூப்பர் சான்ஸ் கிடைத்தது. 37.40 ரூபாய்க்கு அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் வர்த்தகமானது. அன்றைக்கு இந்த பங்குகளில் முதலீடு செய்து, 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் 1,693 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.
செப்டம்பரில் செமத்தியான வாய்ப்பு
கடந்த செப்டம்பர் 2019-ல், 3.9.19 அன்று 44.45 ரூபாய்க்கு வர்த்தகமானது அதானி கிரீன் எனர்ஜி பங்குகள். அன்றைக்கு முதலீடு செய்து, 15 செப்டம்பர் 2020 அன்று 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் 1,409 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். நீங்களே சொல்லுங்கள் ஒரு வருடத்தில் 14 மடங்கு லாபம் எல்லாம் பிரமாதமான விஷயமா இல்லையா?
10 மடங்கு லாபம்
கடந்த 01 அக்டோபர் 2019 அன்று 56.5 ரூபாய்க்கு வர்த்தகமானது அதானி கிரீன் எனர்ஜி பங்குகள். நல்ல வாய்ப்பு. அப்போது முதலீடு செய்துவிட்டு, நேற்று 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட 10.87 மடங்கு (1,087 சதவிகிதம்) லாபம் பார்த்து இருக்கலாம். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டீர்களா?
100 ரூபாய் கடந்த அதானி கிரீன் எனர்ஜி
பொதுவாக ஒரு பங்கு 100 ரூபாய் விலையைக் கடந்துவிட்டால் அதை ஒரு நல்ல பங்காகப் பார்க்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. ஆக கடந்த 2.12.19 அன்று அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை 131.30 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்றைக்கு இந்த 100 ரூபாய் செண்டிமெண்டை வைத்து முதலீடு செய்து, நேற்று 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்து இருக்கும் தெரியுமா? 410 %. நாலு மடங்கு லாபம்.
200 ருபாய் செண்டிமெண்ட்
ஒரு பங்கு விலை புதிய உச்சங்களைத் தொடும் போது அதன் மொமெண்டத்தால் விலை ஏற்றம் காணும் என்பார்கள். அந்த மொமெண்டத்தை நம்பி, 4.5.20 அன்று 209.55 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அன்றைக்கே அதானி கிரீன் எனர்ஜியில் முதலீடு செய்து நேற்று 670.8 ரூபாய்க்கு விற்று இருந்தால் 220 % லாபம். அட ஆமாங்க வெறும் 5 மாத காலத்துக்குள் 2.2 மடங்கு லாபம் பார்த்து இருக்கலாம்.
இரண்டே மாதத்தில் 97% லாபம்
இதை எல்லாம் கூட விடுங்க. கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 03 ஆகஸ்ட் 2020 அன்று 339.8 ரூபாய்க்கு வர்த்தகமான போது, அதானி கிரீன் பங்குகளை வாங்கி, நேற்று (15 செப்டம்பர் 2020) 670.8 ரூபாய்க்கு விற்று இருந்தால் 97.41 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். இத்தனை வாய்ப்புகளையும் நீங்கள் தவறவிட்டீர்களா? கவலை வேண்டாம். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளே முதலீடு செய்யவில்லை
ஜூன் 2020 காலாண்டு நிலவரப்படி, அதானி கிரீன் எனர்ஜி பங்குகளில் 74.91 % பங்குகளை ப்ரொமோட்டர்களே வைத்திருக்கிறார்கள். 21.52 % பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கிறார்கள். வெறும் 0.01 % பங்குகளைத் தான் மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் வைத்திருக்கிறார்கள் என்கிறது பி எஸ் இ தரவுகள். கடந்த 2018 & 2019 ஆண்டுகளில் கூட மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் இந்த பங்கில் முதலீடு செய்யவில்லை என்கிறது எகனாமிக் டைம்ஸ் செய்திகள்.
படிப்போம் பயன்படுத்திக் கொள்வோம்
இப்படி பங்குச் சந்தைகளில் பல அரிய வாய்ப்புகள் அவ்வப் போது வந்து கொண்டே தான் இருக்கும். அந்த வாய்ப்புகளைக் கண்டு கொள்வதற்கும், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கும் நாம் தான் நிறைய படிக்க வேண்டும். தொடர்ந்து படிப்போம். அறிவை வளர்த்துக் கொள்வோம். பங்குச் சந்தைகளில் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வோம். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.