மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடாவின் டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒத்தைக்கு ஒத்தை மோதிக் கொண்டு இருக்கின்றன.
எதில் என்று கேட்டால் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில். பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு விலை இருப்பதைப் போல, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள்.
அதாவது இன்றைய விலைக்கு அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம். அதில் தான் மேலே சொன்ன இந்தியாவின் டாப் இரண்டு கம்பெனிளும் கபடி ஆடிக் கொண்டு இருக்கின்றன.
அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை தற்போது 1,564 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. எனவே அதன் சந்தை மதிப்பு 9.91 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. சமீபத்தில் இந்த பங்கு விலை தன் வரலாற்று உச்சமான 1,576 ரூபாயைத் தொட்ட போது 10 லட்சம் கோடி என்கிற இமாலய சாதனை உயரத்தையும் நெருங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 மாதங்களில் மட்டும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சுமாராக 2 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரித்து இருக்கிறது.
டாடாவின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்கு விலை தற்போது 2,051 ரூபாய்கு வர்த்தகமாகி வருகிறது. எனவே அதன் சந்தை மதிப்பு 7.69 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த 2019-ம் ஆண்டில் டிசிஎஸ் பங்கு விலை சுமாராக 8 சதவிகிதம் தான் உயர்ந்து இருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் பங்கு விலை சுமார் 40 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
ஆக டிசிஎஸ் நிறுவனத்தில் ஏதாவது நல்ல செய்தி வந்து, அதன் பங்கு விலை அதிகரித்தால் மட்டுமே ரிலையன்ஸை நெருங்க முடியும். அது போக, இந்தியாவிலேயே இரண்டாவது அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமும் டிசிஎஸ் என்பதால் தான் இந்த போட்டி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. டிசிஎஸ் கம்பெனியால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை, சந்தை மதிப்பில் தோற்கடிக்க முடியுமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.