எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் சரி வருமான வரி என்ற ஒன்று வருமானத்தில் பெரும் பகுதியை ஒவ்வொரு மாதமும் சாப்பிடுகிறது, இதைக் கண்டு பலர் கடுப்பாகியிருந்தாலும் சிலர் மட்டுமே சரியான வரிச் சேமிப்புத் திட்டங்களைத் தேர்வு செய்து வரியைச் சேமித்து வருகின்றனர்.
அப்படி வரியை எப்படிச் சேமிப்பது எனத் தெரியாமலும், ரிஸ்க் கொண்டு திட்டத்தில் முதலீடு செய்ய விருப்பம் இல்லாத 60 சதவீத மக்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்தச் செய்தி உங்களுக்குத் தான்...
முதலீட்டுத் திட்டம்
பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் என்றால் சாமானிய மக்கள் அனைவருக்கும் இருக்கும் முதலும் முக்கியமான ஆப்ஷன் வங்கி வைப்பு நிதி தான், ஆனால் வங்கி வைப்பு நிதி முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வருமான வரி கழிக்கப்படுகிறது.
ஆனால் நாம் இப்போது பார்க்கப்படும் முதலீடு திட்டம் முதலீடு செய்யும் தொகைக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு எவ்விதமான வரி விதிப்பும் இல்லாதது, அதேபோல் பாதுகாப்பானதும் கூட.
ரிசர்வ் வங்கி
சமீபத்தில் ரிசர்வ் வங்கி பணவீக்க உயர்வையும், ரூபாய் மதிப்பு சரிவையும் சமாளிக்க ரெப்போ விகிதத்தை அதிகரித்தது, இந்த அறிவிப்புக்குப் பின்பு வங்கிகள் வைப்பு நிதிக்கான விட்டியை உயர்த்தாமல் இருப்பது நடுத்தர மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
TAX FREE BONDS நன்மை
இந்நிலையில் வங்கி வைப்பு நிதியை விடவும் அதிக வட்டி வருமானமும் அதேவேளையில் வருமான வரி விதிப்பு இல்லாத TAX FREE BONDS பெரிய அளவிலான நன்மையை அளிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
வரி இல்லா பத்திரங்கள்
இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை வங்கிகள் வெளியிடும் இந்த வரி இல்லா பத்திரங்கள் மீதான முதலீடுக்கு அதிகப்படியான வட்டி வருமானம் கிடைக்கிறது. PFC, REC, NHAI, HUDCO, IRFC நிறுவனங்கள் 2012-2016ஆம் ஆண்டுக் காலத்தில் 10,15, 20 வருட முதிர்வு காலத்தில் பத்திரங்களை வெளியிட்டது. இந்தப் பத்திரங்களுக்கு முதிர்வு காலத்தின் போது சராசரியாக 5.50 முதல் 5.60 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தை அளிக்கிறது.
கணக்கீடு
உதாரணமாக வங்கி வைப்பு நிதியில் 5-10 ஆண்டு வைப்பு நிதி திட்டத்திற்கு 30 சதவீத வரிப் பலகையில் இருக்கும் ஒருவர் வருமான வரி கழிப்புக்குப் பின்பு 3.87 சதவீத வட்டி வருமானம் மட்டுமே அளிக்கும். ஆனால் இதுவே வரி இல்லா பத்திர முதலீட்டுக்கு 5.5 முதல் 5.6 சதவீதம் வரையிலான வருமானம் கிடைக்கும்.
சம்பளம்
இத்தகைய TAX FREE BONDS 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அனைவருக்கும் பெரிய அளவில் பயன்படும், ஆனால் முதலீடு செய்யும் போது அனைத்து ஆபத்துகளையும் அறிந்துகொண்டு முதலீடு செய்துகொள்ளுங்கள்.
வருமான வரி திட்டமிடல்
குறிப்பாக அடுத்த நிதியாண்டுக்கான வருமான வரி திட்டமிடல் காலம் வந்துவிட்ட நிலையில் முன்கூட்டியே திட்டமிட்டு இதுபோன்ற வரிச் சேமிப்பு அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்து பலன்பெறுங்கள்.