வாழ்க்கைச் செலவுகளை சமாளிப்பதற்கு போதிய பணம் இருந்தாலே போதும். இதற்கு பணக்காரராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்றாடச் செலவுகள் குழந்தைகளின் கல்வி, எதிர்பாராத மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் திருமணம் இப்படி வாழ்க்கையின் முக்கிய விஷயங்களை செய்வதற்கு போதுமான பணத்தைக் கொண்டிருந்தாலே மனதில் ஒருவகை நிம்மதி கிடைக்கும். ஆனால் இன்றைய விலைவாசி உயர்வு அதற்கு ஏதுவாக இல்லை. எந்த பக்கம் திரும்பினாலும் விலை உயர்வு சாமானியர்களை பாடாய் படுத்துகிறது. இதை சமாளிக்க வேண்டுமானால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சேமிப்பு செய்வது அவசியம்.
இதற்கு சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய 30, 40 மற்றும் 50 வயதில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?, எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை தி டேக்ஸ் பிளானட் நிறுவனத்தின் நிறுவனர் கனிகா பாலி தெரிவித்திருக்கிறார்.
30 வயது: 30 வயதில் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஆசை திருமணம் செய்து கொள்வது, வீடு வாங்குவது மற்றும் எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்குவது. இந்த மூன்று இலக்குகளையும் தவிர்க்க முடியாது. இதைத்தான் கனிகாவும் கூறுகிறார். உங்களுடைய ஆண்டு வருமானத்தில் 1.5 முதல் 2.5 மடங்கு வரை இந்த 3 இலக்குகளை அடைய சேமிக்க வேண்டும்.

அதாவது ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவர் தன்னுடைய கையில் ரூ.22.5 லட்சம் முதல் ரூ.37.5 லட்சம் வரை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும். இது எந்த வகையான சேமிப்பு என்பது உங்களை பொறுத்தது. அதேபோல ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியும் மிக மிக முக்கியம்.
40 வயது: இந்த நேரத்தில் உங்களுக்கு குடும்பப் பொறுப்புகள் சற்று அதிகமாக இருக்கும். உதாரணமாக உங்கள் குழந்தைகளின் கல்லூரி செலவுகள், வீடு வாங்கி இருந்தால் அதற்கான ஹோம் லோன் EMI-கள் மற்றும் வயதான பெற்றோருக்கு நீங்கள் செய்யும் மருத்துவச் செலவுகள். இது போன்ற செலவுகளைச் சமாளிப்பதற்கு உங்களுடைய ஆண்டு வருமானத்தில் 3 மடங்கு முதல் 5 மடங்கு வரை எடுத்து வைக்க வேண்டும். ஒருவருக்கு வயது 40 ஆகும்போது குடும்ப பொறுப்புகள் உச்சத்தில் இருக்கும், மறுபுறம் வேலை பார்க்கும் இடத்தில் புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். இந்த வயதில் உங்களுக்கு அதிக அளவில் முதலீடு இருப்பது நல்லது.
50 வயது: குழந்தைகளின் கல்வி, திருமண செலவுகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகள் அதன் பிறகு நீங்கள் பயணம் செய்ய தேவைப்படும் செலவுகள் மற்றும் உங்களுடைய ஓய்வு காலம்.. இவை அனைத்தையும் திட்டமிட வேண்டும். அதற்கு உங்கள் ஆண்டு வருமானத்தில் 6 முதல் 10 மடங்கு தொகையை சேமித்து வைத்தே ஆக வேண்டும். அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் இந்த நேரத்தில் பெரும் பகுதியை கரைக்க கூடும்.
எனவே அதற்கான நிதியை உருவாக்க வேண்டும். அதே சமயம் 50 வயதிற்கு பிறகு உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள பயணம் செய்தல், பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்ற விஷயங்களுக்கும் நேரத்தை செலவிட வேண்டும். அப்போது நிறுவனங்களில் சென்று பணிபுரிய முடியாது. இதே காலகட்டத்தில் தான் நீங்கள் ஓய்வுக்கும் சேமிக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் 50 வயதிற்கு பிறகு யாரிடமும் கையேந்தாமல் வாழ வருமானத்தை விட சேமிப்பும் முதலீடும் பன்மடங்காக இருப்பது முக்கியம்.


Click it and Unblock the Notifications