ஹெல்த் இன்சூரன்ஸ் என்றாலே பலரும் நினைப்பது நான் தான் நன்றாக இருக்கிறேனே. எனக்கு எதற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது தான்.
ஆனால் மனிதர்களுடைய வாழ்வின் எந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்று யாராலும் கூற முடியாது. அதிலும் இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது மிக அவசியம்.
இன்று நாம் பார்க்க விருப்பது ஆரோக்கிய சஞ்சீவனி இன்சூரன்ஸ் திட்டம் பற்றி தான். ஆரோக்கிய சஞ்சீவனி இன்சூரன்ஸ் திட்டம் என்பது கடந்த ஏப்ரல் 1, 2020 அன்றும் ஐஆர்டிஏஐ (IRDAI) அறிவித்த புதிய ஸ்டேர்டர்டு பாலிசியாகும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தினை அனைத்து நிறுவனங்களும் வழங்கும்.சரி இந்த ஆரோக்கிய சஞ்சீவனி காப்பீட்டுத் திட்டம் (Arogya Sanjeevani Policy) எந்த விதத்தில் நமக்கு நன்மையாக இருக்கும். வாருங்கள் பார்க்கலாம்.
எவ்வளவு க்ளைம் செய்ய முடியும்?
பொதுவாக இந்த ஆரோக்கிய சஞ்சீவனி காப்பீட்டுத் திட்டத்தில் முதன் முறையாக சேரும் நபருக்கு நன்மையாக இருக்கும் என்றும் கூறப்பகிறது. குறைந்தது ஒரு லட்சம் முதல் அதிகப்பட்சமாக 5 லட்சம் வரை காப்பீடு பெற இது வழி செய்யும் இந்த பாலிசியில், 4000 ரூபாய் முதல் 7,500 வரை பிரிமீயம் இருக்கும். இந்த பாலிசியில் பிரிமீயம் தொகையை தவணையாகவும் செலுத்திக் கொள்ள முடியும்.
தனி நபர், குடும்ப பாலிசியாக எடுத்துக் கொள்ளலாம்
மேலும் இந்த பாலிசியினை தனி நபர் பாலிசியாகவே அல்லது குடும்ப பாலிசியாகவே எடுத்துக் கொள்ளலாம். பாலிசிதாரர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் அடிப்படை மருத்துவ செலவுகளை ஈடுகட்டும் விதமாக ஒரு நிலையான காப்பீட்டுத் திட்டத்தை கண்டிப்பாக தர வேண்டும் என IRDAI காப்பீட்டு நிறுவனங்களிடம் கூறியுள்ளது.
குழப்பமான திட்டம்
இந்த பாலிசியில் எளிமையான அம்சங்கள் அமைந்துள்ளன. சந்தையில் அனைத்து தரப்பினரின் தேவைக்கேற்ற மருத்துவ காப்பீடு திட்டங்கள் இருந்தாலும், ஆனால் அவற்றின் சிக்கலான அம்சங்கள் சராசரி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கெல்லாம் மாறாக எளிய தேர்வுக்கு உதவும் பாலிசியாக இந்த ஆரோக்கிய சஞ்சீவனி காப்பீட்டுத் திட்டம் அமைகிறது.
முதல் முறை பெறுபவர்களுக்கு நன்மையே
அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஒரு பொதுவான காப்பீட்டுத் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதால், போட்டியின் காரணமாக பாலிசியின் பிரிமியம் தொகை குறைவாகவே இருக்கும். இந்த பாலிசியில் சாதகமான, பாதகமான அம்சங்கள் இருந்தாலும், பொதுவாக முதல் முறை காப்பீடு பெறுபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது என கருதப்படுகிறது. குறிப்பாக சிறிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு இது பொருத்தமானதாக அமைகிறது.
குறைந்த செலவில் விரிவான பலன்
எனினும் பெரு நகரங்களில் வசிப்போருக்கு இந்த பாலிசி ஏற்றதாக அமைய வாய்ப்பில்லை. ஏனெனில் பெரும் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் செலவினங்கள் அதிகம் என்பதால் இது பொருந்தாது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த பாலிசியின் இலக்கே குறைவான செலவில் விரிவான காப்பீட்டு பலன்களை அளிக்கும் திட்டமாக உள்ளது.
IRDAI கட்டாயம்
காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் ஒரு பொதுவான காப்பீட்டுத் திட்டத்தை தொடங்குவதை கட்டாயமாக்கி உள்ளது IRDAI. அதன் வழிகாட்டுதலின் படி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், அனைத்து பொது மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்களும் ஏப்ரல் 1, 2020 முதல் ஒரே விதமான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
மருத்துவ காப்பீடை எளிதானதாகவும், பொதுவானதாகவும் மாற்றுவதன் மூலம் இன்னும் அதிகப்படியான மக்களை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர வைப்பது தான் இதன் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.