டெல்லி: 2023 - 24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆனது பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அது குறித்தான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இந்த நிலையில் பல்வேறு விதமாக கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சங்கம் (ASSOCHAM), தனி நபர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும்
இது மக்களின் வளர்ச்சியினை ஊக்குவிக்கப்பதோடு, மக்களின் நுகர்வினையும் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்தத்தில் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசோசெம் கோரிக்கை
தற்போது வருமான வரி வரம்பில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை தான் 5 லட்சம் ரூபாயாக உயர்த்த அசோசெம் கோரிக்கை விடுத்துள்ளது.
பலரின் எதிர்பார்ப்பும் இது தான்
அசோசெம் மட்டும் அல்ல, பல்வேறு தரப்பினரின் மிகப்பெரிய எதிர்பார்க்கப்பாக இந்த 2023 - 24 பட்ஜெட் உள்ளது. குறிப்பாக இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை அதிகரிக்க வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
பழைய வரி புதிய வரி என்ன வித்தியாசம்
தற்போது வரி குறைவு என்றாலும் பலரும் புதிய வருமான வரியை தேர்தெடுப்பதில்லை. சுமார் 10% பேர் மட்டுமே இந்த திட்டத்தினை பின்பற்றி வருகின்றனர். ஏனெனில் புதிய வருமான வரி திட்டத்தில் வரிப்பிரிவு 80சி மற்றும் 80டி-யின் கீழ் வருமான வரி சலுகை என்பது கிடையாது. ஆக பழைய திட்டமே சற்று கவர்ச்சிகரமான ஒன்றாக இருந்து வருகின்றது. இதனைத் தான் பலரும் பின்பற்றி வருகின்றனர்.
வரி சலுகை பலருக்கும் கிடைக்கும்
மொத்தத்தில் பழையதோ புதியதோ இரண்டிலும் 5 லட்சம் வரையிலானவர்களுக்கு மட்டுமே வரி சலுகை கிடைக்கும். அதேசமயம் 5 லட்சம் வருமான வரி விலக்காக அளிக்கப்பட்டால், 5 லட்சம் ரூபாய்க்கு மேலாக வரி செலுத்துபவர்களும் வரி சலுகை கிடைக்கும்.
ஜிடிபியில் தாக்கம் இருக்கலாம்
அசோசெம்மின் தலைவர் சுமந்த் சின்ஹா, சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பொருளாதாரம் மந்த நிலையில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு சில துறைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக ஜிடிபியில் தாக்கம் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.