மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana - APY). இது கடந்த 2015 - 2016ல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள் தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். இதற்கு சிறந்த ஆதாரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான தரவு தான்.
அதாவது அடல் பென்ஷன் திடத்தில் இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர் என்பது தான். இதிலிருந்து முதலீட்டாளர்கள் தங்களது ஓய்வூதியத் திட்டத்திற்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அரசு பணியில் இல்லாதவர்களுக்கு நல்ல சான்ஸ்
ஆக அரசின் இந்த ஓய்வீதிய திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக வந்துள்ளது எனலாம். அரசு பணியில் இல்லாதவர்களுக்கு இந்த ஓய்வூதிய திட்டம் மிகவும் நம்பிக்கையை கொடுத்துள்ளது என்று கூட கூறலாம். இதனை பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே.
யாரெல்லாம் இணையலாம்?
அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து ஒரு கணக்கைத் திறக்க முடியும்.
எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ், இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். ஒரு வேளை சந்தாதாரருக்கு மரணம் ஏற்பட்டால், சந்தாதாரரின் துணைக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். துணை இல்லையெனில் யார் நாமினியோ அவர்களுக்கு இந்த ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.
எப்படி இணைவது?
உங்களுக்கு எந்த வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில், இந்த அடல் பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம். இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, முகவரி சான்று, அடையாள சான்றை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் வங்கி உங்களுக்கான ப்ரான் எண்ணை (pran number) கொடுக்கும்.
எவ்வளவு தொகை நீங்கள் செலுத்தலாம்?
சரி ஒரு வழியாக அடல் பென்ஷன் திட்டத்தில் இணைந்தாயிற்று, மாதம் எவ்வளவு எவ்வளவு தொகை செலுத்தலாம். நீங்கள் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் போதே 60 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக வேண்டும் என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆக நீங்கள் பெற நினைக்கும் பென்ஷன் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும்.
எப்படி பணம் செலுத்துவது?
ஒருவர் இந்த ஓய்வூதிய திட்டத்தின் இணைந்த பின், மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம். அல்லது நம் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு பரான் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக ஆதாரமாக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும்.
எப்போது பணம் எடுப்பார்கள்?
இந்த திட்டத்தில் நீங்கள் எப்போது முதல் முறையாக இணைகிறீர்களோ? அதே தேதியில் அடுத்தடுத்த மாதங்களில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் செப்டம்பர் 9 அன்று இந்த திட்டத்தினை துவங்குகிறீர்கள் என்றால், அக்டோபர் 9 அன்று தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.
இடையில் தொகையில் மாற்றம் செய்ய முடியுமா?
சரி ஆரம்பத்தில் 1000 ரூபாய் தொகையினை செலுத்தியுள்ளீர்கள். இந்த தொகையினை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்த தொகையில் நீங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம். ஆக நீங்கள் ஏப்ரல் மாதத்தில் உங்களது தொகையினை கூடுதலாக செலுத்தவோ அல்லது குறைக்கவோ முடியும்.
அவசரத் தேவைக்கு எடுத்துக் கொள்ள முடியுமா?
அடல் பென்ஷன் திட்டத்தில் சந்தாதாரர் 60 வயதுக்கு பின் இறந்து விட்டால், அவரது இறப்பு சான்றும் இந்த திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார் ஆட்டை, நாமினியின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை, பதிவு செய்யப்பட்ட வங்கிக் கிளையில் கொடுத்தால், வங்கி அந்த விவரங்களை PFRDA-வுக்கு அனுப்பும். இந்த நகல்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர், பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒரு வேளை சந்தாதாரர் 60 வயதுக்கு முன்னரே இறந்தால் அல்லது மிக மோசமான நோய் காரணமாக பணத்தினை எடுக்க வேண்டும் என்றால். சந்தாதாரர் எவ்வளவு தொகையினை செலுத்தினாரோ அதனை மட்டும் பெற்றுக் கொள்ள முடியும்.
60 வயதுக்கு பிறகு இறந்தால் என்ன சலுகை?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, 60 வயதுக்கு பின்னர் சந்தாதாரர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த தொகை கிடைக்கும். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு இந்த தொகை கிடைக்கும்.
நாமினியை மாற்ற முடியுமா?
நீங்கள் உங்களது பென்ஷன் திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாமினி இறந்துவிட்டால், அவருக்கு பதிலாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ள முடியும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கை துவங்கினீர்களோ, அதே வங்கியில் சென்று சரியான ஆவணங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
வங்கியினை மாற்றிக் கொள்ள முடியுமா?
நீங்கள் ஆரம்பத்தில் கனரா வங்கியில் பென்ஷன் கணக்கினை துவங்கியிருந்தால், பின்னர் இதனை வேறு வங்கிக் கிளைக்கும் மாற்றிக் கொள்ள முடியும். உண்மையில் அரசின் இந்த திட்டமானது 60 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தேவையான ஒன்று தான்.