மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒய்வுகாலத்திற்கு ஏற்ற திட்டங்களில் ஒன்று அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana - APY).
இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கும், ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட ஒரு அம்சமான திட்டமாகும்.
இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகளிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அரசு பணியில் இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு
முன்பெல்லாம் அரசு பணியில் இருந்தாலே ஒரு தனி மரியாதை தான். ஏனெனில் ஓய்வுக்காலத்திற்கு பின்பும் ஒரு கணிசமான ஓய்வூதியம் கிடைக்கும். ஆக அவர்களின் வயதான காலகட்டத்தில் கூட, வரும் ஓய்வூதியத்தினை வைத்து சிறப்பாக யாரையும் சாராமல் வாழ்ந்து கொண்டு இருப்பர். ஆனால் இது அமைப்பு சாரா துறைகளில் சாத்தியமில்லை என்பதால், மக்கள் தங்கள் ஓய்வூதிய காலத்தில் அடுத்தவரை சார்ந்திருக்காமல், இருக்க அரசின் இந்த ஓய்வீதிய திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கு, மிகப்பெரிய வரப்பிரசாத வந்தது.
என்னென்ன சலுகைகள்?
ஏனெனில் அரசு பணியில் இல்லாதவர்களுக்கும் இந்த ஓய்வூதிய திட்டம் மிக பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம். அதெல்லாம் சரி, நான் இந்த திட்டத்தில் எப்படி இணைவது? இதில் என்னென்ன சலுகைகள் உள்ளன? முதலீட்டாளர்களுக்கு என்னென்ன நன்மைகள் உண்டு. என்னென்ன ஆவணங்கள் தேவை?.
APY திட்டத்தில் இணைய தகுதியானவர்கள்?
இந்த அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு ஓய்வூதியம்?
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
தினசரி ரூ.7 முதலீடு?
18 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் எனில். தினசரி 7 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள். மாதம் 210 ரூபாய் முதலீடு செய்வீர்கள். பணம் செலுத்த வேண்டிய வருடம் 42 வருடங்களாகும். இதன் மூலம் உங்கள் 61 வயதில் இருந்து மாதம் தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியன்ம் பெறுவீர்கள். இதே மாதம் 42 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாயும், மாதம் 64 ரூபாய் செலுத்தினால் 2,000 ரூபாயும், மாதம் 126 ரூபாய் செலுத்தினால் மாதம் 3000 ரூபாயும், மாதம் 168 ரூபாய் செலுத்தினால், மாதம் 4,000 ரூபாயும் உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும்.
30 வயதில் எவ்வளவு முதலீடு?
30 வயது எனும்போது நீங்கள் 30 வருடம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் மாதம் 1000 ரூபாய் பெஷன் பெற மாதம் 116 ரூபாய் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும். இதே நீங்கள் மாதம் 5000 ரூபாய் பெற 577 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதே 40 வயது எனில் 1,454 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது தான் உங்கள் 60 வயதுக்கு பிறகு, இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
எப்படி இணைவது?
உங்களுக்கு எந்த வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில், இந்த அடல் பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம். இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, முகவரி சான்று, அடையாள சான்றை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் வங்கி உங்களுக்கான ப்ரான் எண்ணை (pran number) பதிவு செய்து கொடுக்கும்.
எவ்வளவு செலுத்தலாம்?
மாதம் எவ்வளவு எவ்வளவு தொகை செலுத்தலாம்? நீங்கள் இந்த திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் போதே, 60 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை உங்களுக்கு ஓய்வூதியமாக வேண்டும் என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆக நீங்கள் பெற நினைக்கும் ஓய்வூதியத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
எப்படி பணம் செலுத்துவது?
அரசின் இந்த ஓய்வூதிய திட்டத்தின் இணைந்த பின், மாதா மாதம் செலுத்த வேண்டிய சந்தா தொகையை, வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோடெபிட் மூலம் செல்லுவது போல் செய்யலாம். இதற்கு ஆதாரமாக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். பணம் செலுத்தினாலும், பணம் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பது பலவும் எஸ்எம்எஸ் ஆக வரும். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
எப்போது பணம் எடுப்பார்கள்?
இந்த திட்டத்தில் நீங்கள் எப்போது முதல் முறையாக இணைகிறீர்களோ? அதே தேதியில் அடுத்தடுத்த மாதங்களில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் மே 17ல் இந்த திட்டத்தினை தொடங்குகிறீர்கள் என்றால், ஜூன் 17ல் மீண்டும் அன்று தவணையை செலுத்த வேண்டியிருக்கும்.
இடையில் தொகையில் மாற்றம் செய்யலாமா?
ஆரம்பத்தில் 500 ரூபாய் தொகையினை செலுத்தியுள்ளீர்கள் என வைத்துக் கொள்ளலாம். ஒரு ஐந்து வருங்டங்கள் கழித்து இந்த தொகையினை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இந்த தொகையில் நீங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம். ஆக நீங்கள் ஏப்ரல் மாதத்தில், உங்களது தொகையினை கூடுதலாக செலுத்தவோ அல்லது குறைக்கவோ முடியும்.
அவசரத் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாமா?
அடல் பென்ஷன் திட்டத்தில் சந்தாதாரர் 60 வயதுக்கு பின் இறந்து விட்டால், அவரது இறப்பு சான்றும், இந்த திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார் ஆட்டை, நாமினியின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை, பதிவு செய்யப்பட்ட வங்கிக் கிளையில் கொடுத்தால், வங்கி அந்த விவரங்களை PFRDA-வுக்கு அனுப்பும். இந்த நகல்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர், பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும்.
செலுத்திய தொகை மட்டுமே கிடைக்கும்?
ஒரு வேளை சந்தாதாரர் 60 வயதுக்கு முன்னரே இறந்தால் அல்லது மிக மோசமான நோய் காரணமாக பணத்தினை எடுக்க வேண்டும் என்றால். சந்தாதாரர் எவ்வளவு தொகையினை செலுத்தினாரோ அதனை மட்டும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான சரியான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இடையில் வழங்கப்படும்.
சிறப்பம்சம் என்ன?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒரு சந்தாதாரர் 60 வயதுக்கு பின்னர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த தொகை முழுமையாக கிடைக்கும். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு அந்த தொகை கிடைக்கும்.
நாமினியை மாற்ற முடியுமா?
நீங்கள் உங்களது ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாமினி துரதிஷ்டவ்சமாக இறந்துவிட்டால், அவருக்கு பதிலாக வேறு ஒரு நாமினியை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கை தொடங்கினீர்களோ, அதே வங்கியில் சென்று சரியான ஆவணங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
வங்கியினை மாற்றிக் கொள்ளலாமா?
நீங்கள் ஆரம்பத்தில் எஸ்பிஐ வங்கியில் பென்ஷன் கணக்கினை தொடங்கியிருந்தால், பின்னர் இதனை வேறு வங்கிக் கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும். உண்மையில் அரசின் இந்த திட்டமானது 60 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் அவசியமான ஒன்று தான். ஏனெனில் வயதான காலத்திலும் யாரையும் சாரமல் வாழ, இது ஒரு அம்சமான திட்டமே. மொத்தத்தில் இந்த திட்டத்தினை தகுதியானவர்கள் எடுக்க வேண்டிய ஒரு சூப்பர் திட்டம் தான்.