இன்று பலருக்கு சேமிப்பு பழக்கம் குறைந்ததற்கான காரணம் தங்கள் முதலீட்டுக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயம் தான். அப்படி இருக்கையில் நீண்ட காலமாக முதலீட்டாளர்களிடையே பெரும் நம்பிக்கையை கொண்ட ஒரு திட்டம் என்றால் அது FD என்று சொல்லப்படுகிற பிக்சட் டெபாசிட் திட்டம் தான். FD என்றாலே நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வந்துவிடும். அந்த அளவுக்கு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றது பிக்சட் டெபாசிட் திட்டம்.

இதனால் பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிகரித்த வட்டியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது பிரபல நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் (Bajaj Finance Ltd) பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இந்த புதிய மாற்றங்கள் மே 1-ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
நீண்ட காலத்திற்கு பணத்தை சேமிக்க வேண்டும் அதே நேரத்தில் தங்களுடைய முதலீடு பத்திரமாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
நீண்ட கால FD டெபாசிட்டுக்கு அதிக லாபம்: இந்த முறை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் வட்டி விகிதங்களை சுமார் 45 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் தங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் சிறந்த வருமானத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதங்கள்: தற்போது 31 முதல் 60 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் குடிமக்களுக்கு 7.40 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இதற்கு முன்னர் இந்த வட்டி விகிதம் 6.95 சதவீதமாக இருந்தது. அதே வேளையில் மூத்த குடிமக்களுக்கு தற்போது 7.75 சதவீதம் வரையிலான வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த வட்டி விகிதம் 7.30 சதவீதமாக மட்டுமே இருந்தது.
வட்டி விகிதங்கள் மட்டுமின்றி பிக்சட் டெபாசிட்களுக்கான கால அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 12 முதல் 14 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்கள் தற்போது 12 முதல் 17 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வட்டி விகிதம் தான் வழங்கப்படுகிறது.
12 முதல் 14 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு முன்னர் 6.60% வட்டி வழங்கப்பட்டது. அதே வட்டி தான் இதற்கும் பொருந்தும். ஆனால் கால அளவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 15 முதல் 23 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 18 முதல் 30 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு 6.85% வட்டி வழங்கப்படுகிறது.
24 முதல் 60 மாதங்களாக இருந்த பிக்சட் டெபாசிட் திட்டம் தற்போது 31 முதல் 60 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு 7.40% வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த வட்டி விகிதம் 6.95 சதவீதமாக மட்டுமே இருந்தது. அதாவது 0.45 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு பயப்படும் முதலீட்டாளர்கள் அதிக வட்டி தரும் எஃப்டிகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப கால அளவைத் தேர்வு செய்து நல்ல வருமானத்தைப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications