முதலீடு என்றாலே இன்றும் பலருக்கு நினைவுக்கு வருவது வங்கி பிக்சட் டெபாசிட் தான். அதனை தாண்டி மக்கள் வெளியே வர பயப்படுகின்றனர். இதில் லாபம் குறைவென்றாலும் முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை என்பதே மிக பாதுகாப்பான ஒரு விஷயமாக உள்ளது.
ஆனால் அதனையும் தாண்டி பல பாதுகாப்பான, லாபகரமான முதலீடுகள் உள்ளன. ஆக சரியான முறையில் ஆலோசித்து முதலீடு செய்தால் அது லாபகரமானதாக இருக்கலாம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது, வங்கி பிக்சட் டெபாசிட் அல்லது அஞ்சலத்தின் பொது வருங்கால வைப்பு நிதி, பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், இவற்றில் முதலீடு செய்ய எது சிறந்தது. எத்தனை ஆண்டுகளில் முதலீடு இருமடங்காக மாறும். எதில் முதலீடு செய்யலாம்? எது பாதுகாப்பானது? எது சிறந்தது? என்ற ஒரு சிறிய ஒப்பீட்டினை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
Rule of 72 அடிப்படையில் கணக்கீடு
நாம் இன்று பார்க்கவிருப்பது Rule of 72 அடிப்படையில் தான். அதோடு எந்த திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம், யாருக்கு ஏற்றது? வயது வரம்பு என்ன? உங்களது முதலீடு எத்தனை ஆண்டுகளில் இருமடங்காக மாறும். மற்ற சலுகைகள் எதுவும் இருக்கின்றதா? என தான் பார்க்க இருக்கின்றோம்.
Rule of 72 விளக்கம்
நீங்கள் செய்யும் முதலீடு எத்தனை வருடத்தில் இரட்டிப்பாகும் என்பதை எளிதாக கணக்கிட விதி 72 போதும். இதற்காக நீங்கள் பெரிய அளவிலான கணக்கீடுகள் எதுவும் செய்யத் தேவையில்லை. உங்கள் முதலீட்டு திட்டத்தின் வட்டி விகிதத்தினை மட்டும் வைத்து, உங்கள் முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்பதை கணக்கிட முடியும். உதாரணத்திற்கு உங்களது சேமிப்புக்கு 8% வட்டி விகிதம் கிடைக்கிறது எனில், 72/8 = 9 வருடங்களில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.
வங்கி பிக்சட் டெபாசிட்
வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை பொறுத்தவரையில் தற்போதைய காலக்கட்டத்தில் வட்டி விகிதம் என்பது மிக குறைவு. நாட்டின் முன்னணி வங்கிகளி கூட 2.9%ல் இருந்து அதிகபட்சம் 5.5%க்குள் தான் கொடுக்கின்றன. இதில் அதிகபட்ச வட்டியான 5.5% என வைத்துக் கொண்டால் கூட, உங்களது டெபாசிட் இருமடங்காக மாற 13.09 வருடங்கள் ஆகும். இதனை எளிதில் அனைத்து வங்கிகளிலும் டெபாசிட் செய்யலாம். இதற்கு மத்திய அரசு 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் திட்டம் இன்னும் ஊக்கம் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி
நீண்டகால நோக்கங்களுக்காக, அதுவும் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம், இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு.
இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு.
இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது 10.14 வருடங்களில் உங்களது முதலீடு இருமடங்காக அதிகரிக்கும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
அஞ்சலத்தின் பெண் குழந்தைகளுக்கென அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா. இந்த திட்டமானது அவர்களின் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரை முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் அல்லது அந்த பெண் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் அந்த கணக்கு தானாகவே மூடப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
சுகன்யா சமிர்தி யோஜனா திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 7.6% வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்வதன் மூலம் 9.47 ஆண்டுகளில் உங்களின் முதலீடு இருமடங்காக மாறும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
தற்போதைய காலகட்டத்தில் நீண்டகால, குறுகிய கால மியூச்சுவல் ஃபண்டுகள் சராசரியாக 6.6% வரை லாபம் கொடுக்கின்றனர். ஆக இந்த முதலீடுகள் 10.9 ஆண்டுகளில் உங்கள் முதலீடுகளை இரட்டிப்பாக்கலாம்.
இதே டைனமிக் பாண்ட் பண்டுகள் சராசரியாக 6.8% வருமானத்தினைக் கொடுக்கின்றன. இதன் படி 10.6 ஆண்டுகளில் இது உங்களது முதலீட்டினை இரட்டிப்பாக்கும். எனினும் மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் ரிஸ்க் விகிதமும் உள்ளது.
சில ஃபண்டுகள் 8 முதல் 15% வரையில் கூட வருமானம் கொடுக்கின்றன. ஆனால் அதே அளவு ரிஸ்க்கும் உண்டு.
எது சிறந்தது?
தற்போதைய சூழலில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நல்ல லாபகரமானதாக பார்க்கப்பட்டாலும், அதே அளவு ரிஸ்கும் உள்ளது. இதே அஞ்சலத்தின் சிறுசேமிப்பு திட்டங்கள் நல்ல லாபகரமானதாக பார்க்கப்படுகிறது. எனினும் அரசின் இந்த சேமிப்பு திட்டங்களுக்கு வரி விகிதம், இன்னும் எவ்வளவு காலத்திற்கு அப்படியே இருக்கும் என தெரியவில்லை. ஆக அதனை பொறுத்து உங்களது முதலீடுகள் இரட்டிப்பாகும். எனினும் இதில் வரிச்சலுகை போன்ற முக்கிய அம்சங்கள் பாதுகாப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.