பேங்க் ஆப் பரோடா ஜூன் 1, 2021 முதல் தனது பாசிட்டிவ் பே சிஸ்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இது குறித்த அறிவிப்பில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஜூன் 1 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டம் மூலம், வாடிக்கையாளர்களிடம் உறுதிபடுத்திய பின்பே காசோலைகள் செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி காசோலைகளை செலுத்துவதற்கு பே பாசிட்டிவ் சிஸ்டம் (positive pay system) என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் படி, 50,000 ரூபாய்க்கு மேலான காசோலைகளுக்குத், தேவையான தகவல்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும். இது வாடிக்கையாளரின் விருப்பப்படி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த காசோலை (cheque) குறித்தான புதிய விதிகள் ஜனவரி 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியிருந்தது.
மோசடிகள் குறையும்
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகள் காசோலை கொடுப்பதை பாதுகாப்பானதாக்குவதற்கும், குறிப்பாக வங்கி மோசடிகளைத் தடுப்பதற்கும் இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் இதன் மூலம் பெரும் மோசடிகள் தடுக்கப்பட வாய்ப்புகள் பல உண்டு. ஏனெனில் மீண்டும் ஒரு முறை வங்கி வாடிக்கையாளர்களிடம் தகவல்கள் உறுதிப்படுத்தப்படும்.
தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும்
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறையின் கீழ் காசோலையை வழங்குபவர் காசோலையின் தேதி, பெறுநரின் பெயர் மற்றும் பணம் செலுத்திய தொகையை மீண்டும் தெரிவிக்க வேண்டும். மேலும் காசோலை வழங்கும் நபர் இந்த தகவலை எஸ்எம்எஸ் (SMS), மொபைல் பயன்பாடு, இணைய வங்கி அல்லது ஏடிஎம் போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் வழங்கலாம்.
தகவல் மிஸ்மேட்ச்
இதன் பிறகு காசோலை செலுத்தும் முன் மீண்டும் இந்த விவரங்கள் குறுக்கு சோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் தகவல் மிஸ்மேட்ச் ஆகிறது என்றால், அந்த பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்படும். இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
கட்டாயமாக்கலாம்
மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், காசோலைகளை வழங்கும் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வங்கிகள் இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தும். எனினும் 5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட காசோலைகளைகளுக்கும் வங்கிகள் இந்த விதிமுறைகளை கட்டாயமாக்கலாம்.
விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சி.டி.எஸ்ஸில் பாசிட்டிவ் பே சிஸ்டத்தை உருவாக்கி, வங்கிகளுக்கு அதைக் கிடைக்கச் செய்யும். 50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளை வழங்கும். அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வங்கிகள் இதை நடைமுறைப்படுத்தும் என கூறியிருந்தது.
எவ்வளவு பே?
இதற்கிடையில் தான் பேங்க் ஆப் பரோடா ஜூன் 1, 2021 முதல் பாசிட்டிவ் பே முறையை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளது. எனினும் இந்த பாசிட்டிவ் பே திட்டமானது 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக காசோலைகள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் போது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஐ.எஃப்.எஸ்.சி குறியீடுகள் மாற்றம்
கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைகளின் ஐ.எஃப்.எஸ்.சி குறியீடுகள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதேசமயம், சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கிளையின் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை 2021 ஜூன் 30 க்குள் புதுப்பிக்குமாறும் அறிவித்துள்ளது.
வங்கிகள் இணைப்பு
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியில் இணைக்கப்பட்டது. அதே ஆண்டில் மற்றொரு பெரிய வங்கி இணைப்பு பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி இது இந்த வங்கிகளின் செயல்பாடுகளை இணைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தான் இந்த மாற்றங்கள் வந்துள்ளன.