நாட்டில் கொரோனாவின் வருகைக்கு பிறகு வங்கிகளில் வட்டி விகிதம் ஏற்கனவே வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. பல வங்கிகளிலும் வட்டி விகிதம் குறைவாக உள்ளது.
தற்போது பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரெப்போ விகிதம் குறைவால் பல வங்கிகளும் வட்டி விகிதத்தினை குறைத்துள்ள நிலையில், தற்போது பேங்க் ஆப் மகாராஷ்டிரா வட்டியினை குறைத்துள்ளது.
எப்போது முதல் வட்டி குறைப்பு
இந்த வட்டி விகிதம் டிசம்பர் 13 முதல் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 6.8%ல் இருந்து, 6.4% ஆக குறைத்துள்ளது. இதே கார் கடனுக்கான வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 7.05%ல் இருந்து, 6.8% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ-யில் நிலவரம்?
எஸ்பிஐ-யில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.7% ஆகவும், இதே கார் கடனுக்கு 7.25% ஆகவும் உள்ளது.
இதே ஹெச்.டி.எஃப்.சி-யில் வட்டி விகிதம் 6.7%ல் இருந்து ஆரம்பமாகிறது.
வாடிக்கையாளர்களுக்கு பயன்
பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் வட்டி குறைப்பானது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக புதியதாக வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். அதே போல கார் வாங்க நினைப்பவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.
வட்டி குறைப்பு
தற்போது பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து, மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில் தேவையானது அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் குறைவான வட்டி விகிதம் பல வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையலாம். கடந்த அக்டோபர் மாதத்தில் விழாக்கால பருவத்தினை ஒட்டி ,பல வங்கிகளும் வட்டி விகிதத்தினை வரலாறு காணாத அளவு குறைத்துள்ளது.
நிகர லாபம்
பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் நிகரலாபம் செப்டம்பர் காலாண்டில், இருமடங்கு அதிகரித்து 264 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே மொத்த வருவாய் விகிதமானது இந்த காலாண்டில் 3700.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3270.07 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.