அரசின் சிறந்த 8 முதலீட்டு திட்டங்கள்.. உங்களுக்கு ஏற்ற சிறந்த முதலீட்டு திட்டம் எது..!
இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. எனினும் அரசின் முதலீட்டு திட்டங்கள் என்றாலே அதில் தனி கெத்து உண்டு. பாதுகாப்பு உண்டு. வருவாய் மற்ற முதலீடுகளை விட குறைவானாலும், ரெகுலரான வருமானம். எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு உண்டு என்பதால் சிறந்தவையாக உள்ளன.
இதனால் அரசின் முதலீட்டு திட்டங்களுக்கு எப்போதுமே? தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் நடப்பு ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த 8 முதலீட்டு திட்டங்களை பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.
குறிப்பாக அரசு பத்திரங்கள், ரிசர்வ் வங்கியின் தங்க பத்திர திட்டம், அடல் பென்சன் யோஜனா, தேசிய ஓய்வூதிய திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி, பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, தேசிய சேமிப்பு பத்திரம், அரசு உள்ளிட்ட திட்டங்களை பற்றித் தான் நாம் இன்று பார்க்க உள்ளோம்.
அரசு பத்திரங்களில் முதலீடு
டி- பில்கள் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கியால் வழங்கப்பட்ட குறுகியகால நிதி கருவிகள் ஆகும். வருமானம் இந்த திட்டத்தில் குறைவாக இருந்தாலும், இந்த சந்தையில் ரிஸ்க் குறைவு தான். ஆக இது பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இந்த டி - பில்கள் 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 1 வருடம் வரை மாறுபடும்.
அரசு பத்திரங்கள் என்பவை, கடன் மூலம் நிதி திரட்டுவதற்காக அரசால் வெளியிடப்படும் பத்திரங்களாகும். ஜி-செக்ஸ் என பிரபலமாக குறிப்பிடப்படும் இந்த பத்திரங்கள், அரசு சார்பில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன. இவை கடன்சார் முதலீடாக அமைகின்றன. இவற்றில் பிரதானமாக இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகையான கரூவூல பில்கள் 19 நாட்கள், 182 நாட்கள் அல்லது 356 நாட்கள் என குறைந்த கால முதிர்வு கொண்டவை.
இதே டேட்டட் செக்யூரிட்டீஸ் எனப்படும் இரண்டாம் வகை பத்திரங்கள் நீண்ட கால நோக்கிலானவை. இவை ஐந்து முதல் 40 ஆண்டு கால முதிர்வு கொண்டவை. இந்த பத்திரங்கள் அரசால் வெளியிடப்படுவதால் மிகவும் பாதுகாப்பானவை.
இவற்றில் எந்த வித கிரெடிட் ரிஸ்கும் கிடையாது. ஆனால், வட்டி விகித ரிஸ்க் உண்டு. அதாவது, வட்டி விகித போக்க்கிற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும் வாய்ப்புள்ளது. வங்கி வைப்பு நிதியை போலவே இந்த பத்திரங்களும் வரி விதிப்புக்கு உட்பட்டவை.
ஓராண்டுக்கு பிறகு இவற்றை விற்பனை செய்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரி உண்டு. ஓராண்டுக்கு முன் விற்பனை செய்தால், வரி வரம்பு விகிதம் பொருந்தும். தேசிய பங்குச்சந்தையின் என்எஸ்இ, கோபிட் செயலி மூலம், இதில் சிறுமுதலீட்டாளர்கள் பங்கேற்க வழி இருந்தாலும், பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில், தற்போது சிறுமுதலீட்டாளர்கள் நேரடியாக அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய, 'ரீடைல் டைரக்ட்' மேடை மூலம் கணக்கு துவக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. சிறுமுதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களை வாங்குவது எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தங்கம் இறையாண்மை பத்திரம்
அரசின் தங்க இறையாண்மை பத்திர திட்டம், பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, அரசு அறிவித்த ஒரு பாதுகாப்பான திட்டமாக இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போது சிறந்த, ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன.
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் வட்டி வருவாயில் டீடிஎஸ் விதிக்கப்படுவதில்லை
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் போடப்பட மாட்டாது. எட்டு வருடம் வரை நீடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அரசின் அடல் பென்சன் யோஜனா
மத்திய அரசு அறிவித்த முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கும், ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும்.
ஏனெனில் அரசு பணியில் இல்லாதவர்களுக்கும் இந்த ஓய்வூதிய திட்டம் மிகவும் நம்பிக்கையை கொடுத்துள்ளது என்று கூறலாம். சொல்லப்போனால் இந்த திட்டம் திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கும், குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக வந்துள்ளது.
அரசின் இந்த அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் திறக்கலாம்.
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம்.
இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில், ஒரு சந்தாதாரர் 60 வயதுக்கு பின்னர், எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த தொகை முழுமையாக கிடைக்கும். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு இந்த தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் வரிச்சலுகையும் உண்டு.
தேசிய ஓய்வூதிய திட்டம்
ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காகவும் சில ஓய்வூதிய திட்டங்களையும், சேமிப்பு திட்டங்களையும் மத்திய அரசு வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தான் தேசிய ஓய்வூதிய திட்டம். குறிப்பாக அரசின் இந்த திட்டம், வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய கொண்டு வரப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 60 வரையிலானவர்கள் யார் வேண்டுமானலும் சேர்ந்து பயன்பெறலாம். இதில் இரண்டு வகையான திட்டங்கள் உண்டு.
சுகன்யா சம்ரிதி யோஜனா
இந்திய அஞ்சல் துறை வழங்கும் சேமிப்பு திட்டங்களில் சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பிரபலமான பெண் குழந்தைகளுக்கான திட்டம். இது அவரது எதிர்காலத்தில் நிதி ரீதியாக பெரும் ஆதரவினைக் கொடுக்கும்.
இந்த திட்டம் மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு பெண் குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும்.
இந்தியாவில் எந்தவொரு அஞ்சல் அலுவலகமும், சேமிப்பு வங்கி வேலையினை செய்கின்றன. சில வங்கிகளும் இந்த சேவையினை செய்து வருகின்றன.
இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் வைப்பு ஒவ்வொரு ஆண்டும் 250 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு வட்டி விகிதம், நிலவரத்திற்கு ஏற்றப்படி அவ்வப்போது இந்திய நிதி அமைச்சகத்தால் மாற்றியமைக்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடையும் போது இந்த திட்டமும் முதிர்ச்சியடைகிறது. நிலுவைத் தொகை மற்றும் கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செலுத்தப்படும். இந்த கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகும் இந்த கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி கொடுக்கப்படும்.
இந்த சுகன்யா சமிரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆக சேமிப்புடன் கூடுதலாக வரிச்சலுகையும் உண்டு.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், நீண்டகால நோக்கங்களுக்காக, அதுவும் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம், இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.
பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா
பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு, 10 ஆண்டுகள் வரையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலம் அதாவது மாதா மாதம், ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு அரையாண்டும் அல்லது ஒவ்வொரு ஆண்டும் என நான்கு கால அளவில் ஒன்றைத் தேர்வு செய்து ஓய்வூதியம் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக 60 வயதினை பூர்த்திச் செய்து இருக்க வேண்டும்.
எல்ஐசி-காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தப் பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியதார்களைச் சார்ந்து உள்ள மனைவி அல்லது கணவன் அல்லது பிறருக்கு இந்த ஓய்வூதியத்தின் கீழ் தவனை முடிய 10 ஆண்டுகள் இருக்கும் போது இறக்க நேர்ந்தால் தொடர்ந்து ஓய்வூதிய பெற அனுமதி உண்டு.
இந்த திட்டத்தினை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பிணையமாக வைத்துக் கடன் வாங்கிக் கொள்ள முடியும். வட்டி விகிதம் 7.66% ஆக வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
அரசு வழங்கி வரும் பல்வேறு திட்டங்களில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமும் சிறந்த திட்டங்களில் ஒன்று.
இந்த திட்டத்தில் வெறும் 330 ரூபாய் பிரிமீயம் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 50 வயதுள்ளவர்கள் எடுக்க முடியும். அதோடு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தான் இந்த சேமிப்பு கணக்கினை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் வருடத்திற்கு 330 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும். ஓரு வேளை பாலிசி தாரர் இறந்து விட்டால், இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும்.
தேசிய சேமிப்பு பத்திரம்
என்எஸ்சி எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம் (National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய அரசின் திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.
அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.