இந்தியாவில் அனைத்து நிதி ரீதியிலான பரிவர்த்தனைகளையும் செய்ய ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக பார்க்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வங்கிகளில் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய அவசியமானதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வங்கிக் கணக்கில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் போட்டாலும், பணம் எடுத்தாலும் பான் அல்லது ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது.
ஆதார், பான் கட்டாயம்
இது மட்டும் அல்ல வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நடப்பு கணக்கு தொடங்கவோ, ரொக்க கடன் கணக்கு தொடங்கவோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பான் கட்டாயம்
முன்னதாக 50,000 ரூபாய்க்கு மேலாக பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனில் பான் எண் கட்டாயம் என இருந்தது. இந்த நிலையில் தற்போது வருடத்திற்கு 20 லட்சம் ரூபாய் என வரம்பினை வைத்துள்ளது. ஆக இதற்கு மேற்கொண்டு பரிவர்த்தனை பெரியளவில் செய்யும்போதும் கட்டாயம் ஆவணங்களை காட்ட வேண்டியிருக்கும்.
பான் இல்லாதவர்கள்
பான் எண் இல்லாதவர்கள், 50,000 ரூபாய் அல்லது ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும்போது, கட்டாயம் பான் எண்ணுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இது நிதி மோசடிகள், வருமான வரி மோசடி என பல பிரச்சனைகளில் இருந்தும் தவிர்க்க வழிவகுக்கும்.
பரிவர்த்தனைக்கு வரம்பு
கறுப்பு பணத்தை ஒழிக்க அரசு பல்வேறு பரிவர்த்தனை வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இது மோசடியான சில பணப்பரிவர்த்தனைகளை தடுக்க பயன்படும். அரசு சில பரிவர்த்தனைகளில் இதுபோன்ற தடைகளை விதித்துள்ளது.
கட்டுப்பாடுகள்
உதாரணத்திற்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தினை வாங்க, செக் அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வங்கி கணக்கு மூலமாக பரிவர்த்தனை செய்யலாம். இதே நன்கொடையாளரிடமிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க பரிசசைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது.அதனை மீறி 2 லட்சத்திற்கு மேலான பரிசை பெற்றால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இப்படி ஏராளமான கட்டுப்பாடுகளும் உள்ளது.