பொதுவாக சாதரணமாக மக்களுக்கு பல ஆயிரம் திட்டங்கள் இருந்தாலும், இன்றும் மூத்த குடிமக்களுக்கு குறிப்பிட்ட சில திட்டங்களே உள்ளன. அதிலும் மிக பாதுகாப்பான திட்டங்கள் என சில அரசின் திட்டங்கள் உள்ளன.
அதிலும் சந்தை அபாயம் இல்லாத, வங்கி வட்டியை விட அதிக வருமானம் கொடுக்கும் திட்டமாக அஞ்சலக திட்டங்கள் உள்ளன.
குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டங்களாக சில திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் நாம் பார்க்கவிருக்கும் திட்டம் மூத்த குடிமக்கள் திட்டம். இது மூத்த குடிமக்களுக்கு ஏற்ற பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத ஒரு திட்டத்தினை பற்றித் தான் பார்க்கவிருகின்றோம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS) என்பது ஒரு பிரபலமான அஞ்சலக திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. இதில் சந்தை ரிஸ்க் என்பது துளியும் இல்லை. நிலையான கணிசமான வருவாயினை கொடுப்பதால், வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இது வயதான காலகட்டத்தில் நிதி ரீதியாக யாரையும் சார்ந்து வாழாமல் இருக்க பயன்படும் ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
வயது வரம்பு
எஸ்.சி.எஸ்.எஸ் திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. பொதுவாக அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். இதே விஆர்எஸ் பெறுபவர்கள் 55 வயதிற்கு மேல் இணைந்து கொள்ளலாம். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளர்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான். எனினும் இந்த சேமிப்பு கணக்கில் HUF & NRI-கள் இணைய முடியாது.
அதிகபட்ச முதலீடு
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த பணம் ஒரு வைப்புத் தொகையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வைப்பு தொகை வரையறுக்கப்பட்டிருந்தாலும், ஒரு நபர் பல எஸ்சிஎஸ்எஸ் கணக்குகளை தொடங்கிக் கொள்ள முடியும். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் சாதாரண வட்டி விகிதம் கிடைக்கும்.
வட்டி விகிதம்
அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டியை மாற்றியமைக்கிறது. தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.40% ஆக உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தில் முன் கூட்டியேவும் கணக்கினை முடித்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணம் உண்டு.
வரி சலுகை உண்டா?
பொதுவாக அஞ்சலக திட்டங்களில் பலவற்றிலும் வரிச்சலுகை உண்டு. குறிப்பாக மூத்த குடி மக்களுக்கான இந்த திட்டத்தில் வரி சலுகையும் உண்டு. இதில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கோரலாம். அதோடு இந்த வைப்பு தொகையின் மூலம் ஈட்டப்பட்ட வட்டி முழுமையாக வரி விதிக்கப்படக்கூடியது தான். வட்டி வருவாய் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் டிடிஎஸ்ஸூம் பிடித்தம் செய்யப்படும். இதனை தவிர்க்க 15h அல்லது 15g படிவத்தை வழங்கி சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மாதம் ரூ.8334 முதலீடு
மாதம் 8334 ரூபாய் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், 5 வருடங்கள் கழித்து 7 லட்சம் ரூபாய் எப்படி முதிர்வு தொகையாக கிடைக்கும். மாதம் 8334 ரூபாய் மூலம் வருடம் 1 லட்சம் ரூபாய் வீதம், 5 வருடத்தில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். தற்போதைய நிலவரப்படி 7.4% வட்டி என்று கொண்டால், வட்டி விகிதம் மட்டும் 1,85,000 ரூபாயாக இருக்கும். ஆக மொத்தம் முதிர்வு தொகையாக 6,85,000 ரூபாயாக இருக்கும். இந்த திட்டத்திற்கும் அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கும் வட்டி விகிதம் என்பது கிட்டதட்ட ஒரே லெவலில் தான் உள்ளது. பிபிஎஃப் திட்டத்திற்கு தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1% ஆகும். எனினும் இது 15 ஆண்டுகால திட்டம்.
வங்கி வட்டியை விட அதிகம்
வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தினை விட, இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம். இதனால் வங்கி டெபாசிட்டுகளுக்கு மாற்றாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. இதில் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் கிடைக்கும். இது வயதான காலகட்டத்தில் முதியோர்களுக்கு கிடைக்கும் ஒரு வருமானமாகவும் பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச வருமானம்
இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீடான 15,00,000 டெபாசிட் செய்தால், வட்டி விகிதம் சேர்த்து முதிர்வு தொகையாக 20,55,000 ரூபாயாக இருக்கும்.