நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான எண்ணம், குறிப்பாக கீழ் தட்டு மக்கள் மத்தியில் இருக்கும் எண்ணம், கோடீஸ்வரராக ஆக விட்டாலும் பரவாயில்லை. கடனாளியா இருக்க கூடாது என்பது தான்.
ஆனால் நினைப்பதோடு சரி, அதனை எட்ட முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
அப்படி இருக்கும் பட்சத்தில் கடன் வாங்காமல், சேமிக்க வேண்டும் இதற்கு என்ன செய்யலாம். நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.
இது சரியான செலவா?
நாம் அன்றாடம் செலவு பல விஷயங்களுக்காக செலவு செய்கிறோம். ஆனால் எதற்காக செலவு செய்கிறோம் என்று யோசித்திருப்போமா? என்றால் நிச்சயம் இல்லை. குறிப்பாக கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தேவையில்லாத பொருட்களை அதிகளவில் வாங்கி குவிப்பர். சில சமயங்களில் இதில் தேவையில்லாத பொருட்களும் இருக்கும். அதனை வாங்கிய புதிதில் பயனபடுத்துபவர்கள், சில தினங்களில் அதனை தூக்கி எறிந்து விடுவர். ஆக தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்க்கலாம்.
ஆடம்பர செலவு வேண்டாம்?
அதேபோல செலவு செய்வதற்கு முன்பு நாம் செய்யும் செலவு சரியானது தானா? என்பதையும் யோசிக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேலாக சம்பாதிப்பார்கள், ஆனால் சம்பளம் வந்த ஒரிரு நாட்களிலேயே செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவர். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவிப்பர். இது தேவையில்லாமல் ஆடம்பர பொருட்களுக்கு செய்யும் செலவாகத் தான் இருக்கும். ஏற்கனவே இருக்கும் ஒரு ஸ்மார்ட்போனை மாற்றி, அதனை விட மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்ட காஸ்ட்லி போனாக வாங்குவது. ஆனால் அதனால் எந்த பயனும் இருக்காது. ஆக இதுவும் உங்களை கடனாளியாகவே மாற்றும்.
தேவையற்றதை வாங்காதீங்க?
ஒரு ஷாப்பிங் கடைக்கு செல்கிறோம். அங்கு நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு, இறுதியாக பில் கவுண்டருக்கு வரும்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிடுக்கும் திட்டமிடாத பொருட்களை வாரி எடுத்து கூடையில் போடுவோம். உதாரணத்திற்கு பேனா வாங்க செல்கிறோம் என வைத்துக் கொள்வோம். பேனாவின் அருகில் உள்ள அழகிய பவுச்சியினையும் இறுதியில் சேர்த்து வருவோம். ஒரு டிரெஸ் எடுக்கலாம் என கடைக்கு போவோம். இறுதியில் 2 வாங்கி வருவோம். இதனால் கூடுதாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆக உங்கள் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். தேவையற்றதை வாங்காமல் இருந்தாலே இன்று பலரும் கடன்காரர்கள் ஆகியிருக்க மாட்டார்கள்.
இஎம்ஐ-யில் வாங்குவதை குறைக்கலாம்
முடிந்த மட்டில் மாத தவணை முறையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கலாம். இது உங்களையும் அறியாமல் உங்களை கடனாளியாக்குகிறது. இது நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு வட்டியுடன் கடனை செலுத்த வேண்டியிருக்கும்.
கடனாக வாங்கும் பொருள் மூலம் கிடைக்கும் பலன் என்ன? என்பதை சிந்திக்க வேண்டும்.
புதியதாக கடன் வாங்குவதை தவிருங்கள்
உங்கள் வருமானத்தினை தாண்டி கடன் போய்விட்டால் அதனை அடைப்பதற்காக நீங்கள் பலவற்றை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆக இனியேனும் புதியதாக கடன் வாங்குவதை தவிர்க்கலாம்.
கடன் வாங்குவதை குறைக்கும் அதேசமயம், செலவுகளை குறைக்க வேண்டும். மொத்தத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்காதீர்கள், அதனை கடன் வாங்கி வாங்காதீர்கள்.