இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிகவும் முக்கியமான எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஐபிஓ-வாக விளங்கும் எல்ஐசி நிறுவனம் சுமார் 63000 கோடி ரூபாய் அளவிலான தொகைக்கு ஐபிஓ வெளியிட உள்ளது. இந்த ஐபிஓ இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் மிக முக்கியமானதாக விளங்கும் நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
DRHP அறிக்கை
மத்திய அரசு புதிய DRHP அறிக்கையைச் செபி அமைப்பில் தாக்கல் செய்யாமல் மே 12ஆம் தேதிக்குள் ஐபிஓ வெளியிட முடியும். ஆனால் இந்தக் கால அளவீட்டைத் தாண்டி விட்டால் கட்டாயம் புதிய அறிக்கையைச் செபி அமைப்பிடம் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்ற பின்னரே ஐபிஓ வெளியிட முடியும். இந்நிலையில் மத்திய அரசு வருகிற ஏப்ரல் 25-29ஆம் தேதியில் எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட வாய்ப்புள்ளது.
பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள்
இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்ய மத்திய அரசு அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, சிங்கப்பூர் நாட்டின் GIC, 3 கனடா நாட்டின் பென்ஷன் பண்ட் நிறுவனங்கள், கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி ஆகிய பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களுடன் முதலீடு செய்ய அழைப்பு விட்டுள்ளது.
ஐபிஓ மதிப்பீடு
எல்ஐசி நிறுவனம் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு இருந்த நிலையில், புதிய மற்றும் அதிகப்படியான முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஐபிஓ பங்குகளின் விலையைக் குறைக்கும் விதமாக நிறுவனத்தின் மதிப்பீட்டை 11 லட்சம் கோடி ரூபாயாகக் குறைக்கப்பட ஆலோசனை செய்து வருகிறது.
2.17 கோடி இன்சூரன்ஸ் பாலிசி
2021-22ஆம் நிதியாண்டில் எல்ஐசி நிறுவனம் 2.17 கோடி இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 3.54 சதவீதம் அதிகம், அதேபோல் ப்ரீமியம் வசூல் 12.66 சதவீதம் அதிகரித்து 1.43 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
முதல் முறை ப்ரீமியம்
2021-22ஆம் நிதியாண்டில் முதல் முறை ப்ரீமியம் செலுத்தியதில் எல்ஐசி 63 சதவீத வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் இந்த அளவீடு தொடர்ந்து சரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனால் எல்ஐசி நிறுவனத்தின் வர்த்தகத்தில் நிலையற்ற தன்மையும், சரிவையும் சந்திக்கத் துவங்கியுள்ளது ஐபிஓ முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
ஐபிஓ முதலீடு
எல்ஐசியின் ஐபிஓ பங்குகளுக்குச் சில்லறை முதலீட்டாளராகவோ அல்லது பாலிசிதாரராகவோ முதலீடு செய்யப் பெற முடியும். நீங்கள் ஏற்கனவே எல்ஐசி பாலிசிதாரராக இருந்தால், உங்கள் பான் கார்டை பாலிசியுடன் இணைக்க வேண்டும். LIC தனது அனைத்து பாலிசிதாரர்களையும் இந்த ஆண்டுப் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் பான் கார்டுகளை இணைக்குமாறு எல்ஐசி அறிவித்து இருந்தது.
பங்கு ஒதுக்கீடு
எல்ஐசி இந்த ஐபிஓ-வில் அதன் பாலிசிதாரர்களுக்கு 10 சதவீத பங்குகளையும், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 5 சதவிகித பங்குகளையும் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த பாலிசிதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்தச் சிறப்புப் பங்கு ஒதுக்கீட்டு மூலம் நன்றி தெரிவித்துள்ளது எல்ஐசி.
தகுதிகள்
பாலிசி சரண்டர், முதிர்வு அல்லது இறப்பு மூலம் எல்ஐசியின் பதிவுகளிலிருந்து வெளியேறாத அனைத்து பாலிசிதாரர்களும் எல்ஐசி ஐபிஓ-வில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள். ஆனால் ஐபிஓ-வில் முதலீடு செய்ய விரும்புவோர் பாலிசியைப் பான் கார்டு உடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.