ஆன்லைன் பயண சேவை நிறுவனமான, ஈஸி டிரிப் பிளானர்ஸ் வரும் மார்ச் 8ம் தேதியன்று, தனது புதிய பங்கு வெளியீட்டினை செய்கிறது.
பொதுவாக நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீடு என்றாலே, அது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை.
ஆக அப்படி ஒரு வாய்ப்பினை மிஸ் பண்ண வேண்டுமா? எந்த நிறுவனம் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. என்ன விலை? மற்ற விவரங்கள் என்ன? முதலில் பொது பங்கு வெளியீடு என்றால் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பொது பங்கு வெளியீடு
ஏனெனில் பங்கு சந்தையில் நுழையும் நிறுவனங்கள், முதல் முறையாக வெளியிடும் பங்குகளே பொது பங்கு வெளியீடு எனப்படுகிறது. ஆரம்பத்தில் பங்கு சந்தைக்குள் நுழையும்போது முதலீட்டாளர்களை கவர, நல்ல நிறுவனங்கள் கூட குறைந்த விலையில் வெளியிடுவார்கள்.
ஆக மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளை ஆரம்ப காலத்திலேயே வாங்குவது நல்ல விஷயம்.
நல்ல பலன் கொடுக்கும்
ஒன்று குறைந்த விலையில் கிடைக்கும், மற்றொன்று அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் என்றால் நிச்சயம் போட்டிகள் குறைவு. இப்படி முதலீட்டாளர்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக உள்ள நிலையில், அதில் முதலீடு செய்வது சிறப்பானதொரு விஷயம் தானே.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஈஸி டிரிப் பிளானர்ஸ் ஐபிஓ பங்கு வெளியீட்டினை பற்றித் தான்.
பங்கு வெளீயீடு எப்போது
இந்த பங்கு வெளியீட்டின்போது, புதிய பங்குகளை விற்பனை செய்யாமல், நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகள் மட்டுமே, விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பங்கு விற்பனையானது மார்ச் 8 அன்று தொடங்கவுள்ளது. மார்ச் 10 அன்று முடிவுக்கு வரவுள்ளது. ஒதுக்கீடு குறித்த இறுதி முடிவுகள் மார்ச் 16 அன்று எடுக்கப்படவுள்ளது. மார்ச் 19 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு விலை நிர்ணயம்
இதற்கிடையில் ஒரு பங்கின் விலை, 186 - 187 ரூபாய் என, நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 510 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளது. ஈஸி டிரிப் பிளானர்ஸ் அதன் நிறுவனர்களான, நிஷாந்த் பிட்டி, ரிகாந்த் பிட்டி ஆகிய இருவரும், தலா 255 கோடி ரூபாய்க்கு, தங்கள் வசம் இருக்கும் பங்குகளை, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
லாபம் கொடுக்கலாம்
இந்த நிறுவனத்தின் வெளியீட்டினை ஆக்ஸிஸ் கேப்பிட்டல் மற்றும் ஜேஎம் பைனான்ஷியல் நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. இந்த ஈஸி டிரிப் பிளானர்ஸ் நிறுவனம், ஈஸிமைடிரிப் டாட் காம் எனும் இணையதளம் மூலம் தனது சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் 2008ல் தொடங்கப்பட்டது. நாட்டில் ஆன்லைன் சேவைகளின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இது பிற்காலத்தில் நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாஸ்டாக்கில் பட்டியல்
இந்த நிறுவனம் தற்போது நொய்டா, பெங்களுரு, மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் தனது சேவையினை வழங்கி வருகின்றது. இதன் துணை நிறுவனங்களின் அலுவலகங்கள் சிங்கப்பூர், UAE மற்றும் லண்டனில் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நிறுவனம் கடந்த 2010ல் நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டது. ஆக இது ஒரு நல்ல வாய்ப்பு தான்.