இன்றைய காலக்கட்டத்தில் வயதானவர்கள் நிதி பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய பல திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மத்தியில் மிக பிரபலமானது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் எனலாம்.
ஏனெனில் இது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆக இது பாதுகாப்பானது என்பதோடு, வருமானம் குறைவாக இருந்தாலும், நிலையான வருமானமாக பார்க்கப்படுகிறது.
பிரச்சனை வேண்டாம்
இளமை காலத்தில் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. முதுமை காலத்தில் ஆவது எந்த பிரச்சனையும் இல்லாமல், நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமும். இன்றைய காலகட்டத்தில் பலரின் எண்ணமும் வயதான காலகட்டத்தில் யாரையும் சாராமல், குடும்ப தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பர்.
பென்சனுடன் கழிக்கலாம்
அரசின் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் கடந்த 2004 அன்று தொடங்கப்பட்டது.
இது மூத்த குடிமக்களுக்கு உத்தரவாதமான வருமானத்தினை வழங்குகிறது. ஆக இது வயதான காலத்தில் ஒரு வருமானத்தினை உறுதி செய்கிறது.
இது தொடர்ச்சியாக ஒரு வருமானம் போலவும் அமைகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி என்ன சொல்கிறது?
இது குறித்து அண்மையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், வயதான காலத்தில் பயனாளார்களின் நிதி பாதுகாப்பினை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
இது அரசின் திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. மேலும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகவும் உள்ளது.
இணைய தகுதி?
இந்தியாவில் ஓய்வுபெற்ற குடியுரிமை பெற்ற ஒரு இந்தியராக இருக்க வேண்டும்.
அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும்.
50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான்.
எவ்வளவு முதலீடு?
இந்த ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம்.
எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது.
வட்டி விகிதம்?
இந்த திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7.40% ஆக இருந்தது.
இந்த கணக்கில் தனி நபர் மற்றும் துணையுடன் இணைந்து ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். நாமினி வசதியும் உண்டு.
முதிர்வுகாலம் எவ்வளவு?
இந்த ஓய்வூதிய திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
இந்த திட்டத்தில் முன் கூட்டியேவும் கணக்கினை முடித்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு டெபாசிட் தொகையில் 1.5% அபராதம் உண்டு.
இதே 2 வருடங்களுக்கு பிறகு முடித்தால் 1% டெபாசிட் தொகையில் இருந்து கழிக்கப்படும்.
வரி சலுகை உண்டா?
மூத்த குடி மக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு. இது 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.
வருமான வரி விதிக்கப்பட்டாலும், 15h அல்லது 15g படிவத்தை வழங்க வேண்டும்.
எப்படி தொடங்கலாம்?
இந்த சேமிப்பு திட்டமானது பல முன்னணி பொதுத்துறை மற்றும் சில தனியார் வங்கிகளிலும் வழங்கப்படுகிறது. அஞ்சலகத்திலும் தொடங்கிக் கொள்ளலாம்.
இதற்கு கணக்கு தொடங்க பார்மினை கொடுத்து தொடங்கிக் கொள்ளலாம்.
இதற்கு 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவை
முகவரி மற்றும் அடையாள அட்டை தேவை. ஆதார், பான் உள்ளிட்டவை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
கணக்கு தொடங்கும்போது உங்களது ஓரிஜினல் ஆவணங்களை காட்ட வேண்டியிருக்கும். ஆக கணக்கும் தொடங்கும்போது அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.