இன்றைய காலகட்டத்தில் பலரும் விரும்புவது நம் இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. முதுமை காலத்திலாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான்.
அதோடு வயதான காலகட்டத்தில் நிதி உதவிக்கென்று யாரையும் சாராமல் வாழ வேண்டும் என்பது தான் பலரின் விருப்பமே. ஆக அப்படி நினைப்பவர்களுக்கு ஏற்ற திட்டம் எது? எதில் முதலீடு செய்யலாம். எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதனை தான் இன்று பார்க்கவிருக்கிறோம்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம். இதில் என்னென்ன சலுகை, யாருக்கு பொருந்தும், வாருங்கள் பார்க்கலாம்.
ஓய்வுகாலத்திற்கு ஏற்ற திட்டங்கள்
இந்த இரு திட்டங்களுமே ஓய்வு காலத்திற்கு ஏற்ற சிறந்த திட்டங்களாகத் தான் உள்ளன. குறிப்பாக தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது நம் நாட்டில் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் சிறப்பே முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் ஒரு திட்டமாகும்.
அனைவருக்கும் ஏற்ற தேசிய ஓய்வூதிய திட்டம்
இந்த திட்டம் கடந்த 2004ல் அரசு ஊழியர்களுக்காக, தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
NPS திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்
குறிப்பாக இந்த திட்டம் வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே, அரசின் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். அதோடு வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளும் இதில் உள்ளது.
NPS திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு?
இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்சம் டயர் I கணக்கில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்தும், டயர் II கணக்கில் இருந்து குறைந்தபட்சம் 1000 ரூபாயும் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் EPF திட்டத்தினை போல அதிகபட்சம் வரம்பு என்பது இல்லை.
வயது தகுதி
18 வயது முதல் 60 வரையிலானவர்கள் யார் வேண்டுமானலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில், வாடிக்கையாளர் கேஒய்சி விதிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இதனை பல வங்கிகள் நிதி நிறுவனங்கள் என எங்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
ஊழியர்களுக்கு வழங்கும் EPF திட்டம்
இதே ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாகும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி நிறுவனங்களும் தொழிலாளர்களும் சேர்த்து, ஒரு தொகையை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பங்களிப்பாக செலுத்தப்படுகிறது.
EPF திட்டத்தில் வரம்பு தொகை
EPF திட்டத்தில் கட்டாயம் நிறுவனம் 12 சதவீதம் தொகையும், ஊழியர்கள் 12 சதவீதம் தொகையும் செலுத்த வேண்டியிருக்கும். வழக்கமாக நமது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியானது, இபிஎஃப் ஒரு வரம்புக்குள் உட்பட்டதாகவே இருப்பதால், பலரும் விபிஎஃப் முதலீட்டினை ஆர்வத்துடன் தொடருகின்றனர்.
விபிஎஃப் உண்டு
ஏனெனில் விபிஎஃப் கணக்கிற்கு எந்த வரம்பும் இல்லை. இதன் மூலம் நீங்கள் அதிக தொகையினை ஓய்வுக்காலத்திற்கு சேமிக்க முடியும். அனினும் விபிஎஃப் தொகையை நீங்கள் அதிகரித்தாலும், நிறுவனத்தின் பங்களிப்பு அதிகரிக்காது. இந்த தொகைக்களுக்கு வட்டி விகிதம் 8.5% வழங்கப்படுகிறது.
இடையில் பணம் எடுக்கலாமா?
EPF திட்டத்தில் முழுமையாக பணத்தினை இடையில் எடுக்க முடியாது. நீங்கள் கணிசமான தொகை எடுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக மருத்துவ பிரச்சனை, வீடு கட்டுதல், கல்வி போன்ற முக்கிய நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய் வரையில் செய்யப்படும் முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி சலுகை உண்டு. அதற்குமேற்பட்ட தொகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கு உங்களது வருமான வரி அளவின் படி வரி செலுத்த வேண்டியிருக்கும்.
EPF Vs NPS எது பெஸ்ட்
ஆக மொத்தத்தில் தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது அனைவரும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் EPF திட்டத்தினை சம்பளதாரர்கள் மட்டுமே பெற முடியும். தேசிய ஓய்வூதிய திட்டத்திலும் 80சி படி வரி சலுகை உண்டு, வருடத்திற்கு குறைந்தபட்சம் 6000 ரூபாய், அதாவது மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இடையில் முக்கிய காரணங்களுக்கு தவிர பணம் எடுக்க முடியாது.