தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான EPFO ஊழியர்களுக்கு பயனுள்ள வகையில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தனது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, விரைவுபடுத்தியுள்ளது. புதிய வேலைக்கு மாறுவது, பிஎஃப் தொகையை எடுப்பது போன்ற செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள 5 முக்கிய மாற்றங்களை நாம் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
1.ஆட்டோ செட்டில்மென்ட்: இதுவரை மருத்துவ அவசரத் தேவை போன்ற முன்பணங்களுக்கு மட்டுமே பிஎஃப் -இல் ஆட்டோ-செட்டில்மென்ட் வசதி இருந்தது. தற்போது, பிஎஃப் கணக்கை முழுமையாக முடித்து பணத்தை எடுக்கும் (Final Withdrawal) கோரிக்கைகளுக்கும் இந்த ஆட்டோ-செட்டில்மென்ட் வசதியை EPFO கொண்டு வந்துள்ளது. எனவே மொத்த பிஎஃப் பணத்தை எடுக்க நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, விரைவாக பணத்தைப் பெற முடியும்.

2. UAN-இல் மாற்றம்: புதிய அல்லது ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள், இனி EPFO-வின் பிரத்யேக இணையதளத்தில் UAN எண்ணை உருவாக்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது. இந்த சேவைகள் அனைத்தும் Umang செயலிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் பாதுகாப்பை உறுதிசெய்ய, ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3. பிஎஃப் டிரான்ஸ்பர்: வேலை மாறும்போது பிஎஃப் கணக்கை மாற்றும் முறை இனி தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மற்றும் KYC முறையை முழுமையாக நிறைவு செய்த ஊழியர்களுக்கு, வேலை மாறும்போது பிஎஃப் கணக்கு தானாகவே புதிய நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுவிடும். இதற்கு முன்பு போல தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை. இது தேவையற்ற வேலைகளை குறைத்து, செயல்முறையை எளிதாக்குகிறது.
4.விரைவான தீர்வு : பிஎஃப் தொகையை பெறுவதற்கான கோரிக்கைகளைத் தீர்ப்பதில் EPFO வேகம் காட்டி வருகிறது. பெரும்பாலான புதிய கோரிக்கைகள், சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்குள் தீர்க்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. மேலும், ஓய்வூதியத் திட்டத்தின் (EPS 2026) கீழ் வரும் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு 20 நாட்கள் என்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரணமின்றி இந்த காலக்கெடுவை தாண்டினால், தாமதமாகும் தொகைக்கு 12% வட்டி விதிக்கப்படும்; அந்த தொகையை பொறுப்பான அதிகாரியிடமிருந்து வசூலிக்கவும் விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
5. பிஎஃப் பணத்தை பெற இனி UPI வசதி: பிஎஃப் தொகையை நேரடியாக உங்கள் UPI-ஐ இணைத்த வங்கி கணக்கிற்கு பெறும் வசதி விரைவில் வரவுள்ளது. BHIM செயலியின் மூலம் இந்தச் செயல்முறை செயல்படுத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வரும்போது, உங்கள் பிஎஃப் பணத்தை UPI மூலமே எளிதாக எடுக்க முடியும். ஈபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் கீழ் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலமும் ஏடிஎம் வாயிலாகவும் எடுக்க முடியும்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு பிஎஃப் தொடர்பான பணிகளை எளிமையாகவும், வேகமாகவும் முடித்திட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் தங்கள் ஆதார் மற்றும் KYC விவரங்களை சரியாக புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.


Click it and Unblock the Notifications

