இந்தியாவில் கோடிக்கணக்கான தனியார் துறை மற்றும் முறைசார் நிறுவன ஊழியர்கள் நீண்ட காலமாக பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என காத்திருக்கின்றனர்.
மத்திய அரசு இபிஎப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய கட்டமைப்பின் கீழ், உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலமாக மிக எளிதாகவும் உடனடியாகவும் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தது. கடந்த ஆண்டே இது குறித்த அறிவிப்பு வெளியானது சில மாதங்களுக்கு முன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஆனால் இதுவரை இந்த திட்டம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. ஜூன் மாதம் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகின. அது அப்படியே தள்ளி போய் தற்போது செப்டம்பர் மாதமே வந்துவிட்டது. எப்போது ஈபிஎஃப்ஓ 3.0 செயல்படுத்தப்படும், பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் நாம் நினைக்கும் போதெல்லாம் எடுக்கும் வசதி எப்போது அறிமுகமாகும் என கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்கள் காத்திருக்கின்றனர்.
செப்டம்பர் மாதத்திலாவது இது நடைமுறைக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) மற்றும் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் ஒருங்கிணைப்போடு உருவாக்கப்பட்ட இந்த புதிய EPFO 3.0 தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகள் தற்போது இறுதி கட்டப் பணிகளில் உள்ளன என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கான அடிப்படை டிஜிட்டல் தரவுத்தளங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் பிஎஃப் பணத்தை எடுக்க நீண்ட நாட்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் அல்லது ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக தங்களது கணக்கில் உள்ள பணத்தை உடனடியாக பெற முடியும்.
பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது மொத்த பிஎஃப் இருப்பில் 50% முதல் 75% வரை அவசரத் தேவைகளுக்காக உடனடியாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள தொகை ஓய்வூதிய கால பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும். இதுவரை பிஎஃப் பணம் எடுக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் டிஜிட்டல் ஒப்புதல் அல்லது சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. இதனால் பலமுறை தாமதம் மற்றும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏற்பட்டது. புதிய முறையில் இந்த நடைமுறை நீக்கப்பட்டு, தானியங்கி தீர்வு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
வங்கி சேவைகளை போல பிஎஃப் கணக்கையும் எளிய முறையில் கையாளுவதற்கான இந்த அதிநவீன EPFO 3.0 முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது, இது கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை தரும் என்பதில் ஐயமில்லை. எனவே இதனை விரைவாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே தனியார் நிறுவன ஊழியர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.


Click it and Unblock the Notifications

