இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு பிஎஃப் பணத்தை எடுத்து செலவு செய்வதை எளிமையாக்கும் வகையில் மத்திய அரசு EPFO 3.0 திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஒரு கிளிக்கிலேயே யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுத்து பயன்படுத்த முடியும்.
மத்திய தொழிலாளர் அமைச்சகம் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பெரிய டிஜிட்டல் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. இதனை தான் EPFO 3.0 என அழைக்கிறார்கள். இந்த புதிய திட்டத்தின்படி, பிஎஃப் (PF) பணத்தை எடுக்கும் நடைமுறைகள் முற்றிலும் காகிதமில்லாத டிஜிட்டல் முறையாக மாற்றப்படும். இதன் மூலம், சந்தாதாரர்கள் தங்களின் பிஎஃப் பணத்தை UPI மற்றும் ஏடிஎம்கள் மூலமாக நேரடியாகவும், உடனடியாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.

வங்கி டிஜிட்டல் பேக்கிங் போல பிஎஃப் கணக்கும் டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது. இதற்கான சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த வாரம் தெரிவித்தார். இவ்வாறு பிஎஃப் கணக்கில் இருந்து 75% பணத்தை மட்டுமே யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் எடுக்க முடியும்.
இந்த வசதி உங்களது பிஎஃப் கணக்கில் உள்ள பணத்திற்கு (தொழிலாளி மற்றும் நிறுவனம் செலுத்திய பங்களிப்பு) மட்டுமே பொருந்தும். அதே வேளையில் ஈபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய கணக்கில் சேரும் பணத்திற்கு பொருந்தாது. தொடர்ந்து 10 ஆண்டுகள் பங்களிப்புக்கு பின்னர் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியத்திற்கு செல்லும்.
இந்நிலையில் தான் பிஎஃப் கணக்கிலிருந்து பெரிய தொகையை ஏடிஎம் மூலம் எடுத்தால், அது தங்களின் ஓய்வூதியப் பலன்களைப் பாதிக்குமோ என்ற கவலை பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. பிஎஃப் பணத்தை ஏடிஎம் அல்லது யுபிஐ மூலம் எடுப்பதால் உங்கள் ஓய்வூதியத பலன்கள் பாதிக்காது என தெரிவிக்கிறது.
அதாவது அரசு பிஎஃப் (EPF) சேமிப்பையும், ஓய்வூதிய (EPS) பங்களிப்பையும் தனித்தனியாகவே கையாள்கிறது. ஏடிஎம் மூலம் நீங்கள் எடுக்கும் பணம் பிஎஃப் கணக்கிலிருந்து மட்டுமே குறையும்; ஓய்வூதியக் கணக்கிலிருந்து அல்ல. எனவே இதனால் உங்கள் ஓய்வூதிய தொகை நிச்சயம் குறையாது என விளக்கம் தருகிறது.
50 வயதான ஒரு ஊழியர் பிஎஃப் தொகையின் பெரும்பகுதியை எடுத்தாலும், அது அவரது ஓய்வூதிய தொகையை குறைக்காது ஏனெனில் பிஎஃப் சேமிப்பு கணக்கில் இருந்து தான் பணத்தை எடுக்க முடியுமே தவிர ஓய்வூதிய கணக்கில் சேரும் பணத்தில் கையே வைக்க மாட்டார்கள்.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்யும் ஊழியருக்கு மட்டுமே பென்ஷன் கணக்கு தொடங்கி ஓய்வூதிய தொகைக்கு பணம் பங்களிப்பு செய்யப்படும். இந்த ஊழியர் பணி ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதிய கணக்கில் இருக்கும் பணம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். அதுவரை இந்த பணத்தை எடுக்க முடியாது.


Click it and Unblock the Notifications

