இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஓய்வு கால நிதி பாதுகாப்புக்காக தான் தொழிலாளர் வருங்கால வைப்பு தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. EPFO-வின் கீழ் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு அவர்கள் பெயரில் மாதம் ஒரு தொகை வரவு வைக்கப்பட்டு, பணி ஓய்வின் போது அது வட்டியுடன் சேர்த்து மொத்த தொகையாகவும் ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது.
EPFO-வின் 'ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில்' (Employees' Pension Scheme - EPS) மாதந்தோறும் ஓய்வூதியம் பெற, ஒரு நபர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியிருக்க வேண்டும், அதாவது 10 ஆண்டுகள் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். ஒரே நிறுவனத்தில் தான் 10 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பதில்லை. வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அந்த மொத்த பணிக்காலத்தையும் சேர்த்து 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

ஒரு ஆண்டில் 6 மாதங்களுக்கு மேல் நீங்கள் பணிபுரிந்திருந்தால், அது முழு ஆண்டாகக் கணக்கிடப்படும். 6 மாதங்களுக்குக் குறைவாக இருந்தால், அந்த மாதங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. 10 ஆண்டுகளுக்கு பின் உங்கள் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை ஈபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய நிதிக்கு செல்ல தொடங்கும். பணி ஓய்வு பெற்ற பிறகு மாதம் ஓய்வூதிய தொகையாக வழங்கப்படும்.
உங்கள் சம்பளத்தில் 12% பிஎஃப் கணக்கிற்குச் செல்கிறது. இதில் ஒரு பகுதி (8.33%, அதிகபட்சம் ரூ1,250 வரை) EPS-க்குச் செல்கிறது. இதுவே பிற்காலத்தில் உங்களுக்கு ஓய்வூதியமாகத் திரும்பக் கிடைக்கிறது. இந்த ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கு EPFO ஒரு குறிப்பிட்ட ஃபார்முலாவை பயன்படுத்துகிறது. அதாவது
மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியத்திற்குரிய சம்பளம் × பணிபுரிந்த ஆண்டுகள்) ÷ 70
பொதுவாக, ஓய்வு பெறுவதற்கு முந்தைய 60 மாதங்களின் (5 ஆண்டுகள்) சராசரி அடிப்படைச் சம்பளம் கணக்கிடப்படும். தற்போது EPS-க்கான உச்ச வரம்பு மாதம் ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், கணக்கீட்டிற்கு ரூ.15,000 மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.
உதாரணமாக நீங்கள் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளீர்கள், உங்கள் சராசரி ஓய்வூதியச் சம்பளம் ரூ15,000 எனக் கொண்டால்:
(15,000 × 10) ÷ 70 = ரூ.2,143 (தோராயமாக)
எனவே, மாதம் தோறும் உங்களுக்கு சுமார் ரூ. 2,143 ஓய்வூதியமாகக் கிடைக்கும். நீங்கள் 58 வயது அடைந்த பிறகு ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள் ஆவீர்கள். 50 வயது முடிந்த பிறகு, ஆனால் 58 வயதுக்கு முன் ஓய்வூதியம் பெற நீங்கள் விரும்பினால், அது கிடைக்கும். ஆனால், 58 வயதுக்கு முன்னால் ஒவ்வொரு ஆண்டிற்கும் 4% என்ற விகிதத்தில் ஓய்வூதியத் தொகை குறைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் 10 ஆண்டுகள் பணியாற்றுவதற்கு முன்பே வேலையை விட்டு விலகிவிட்டால், நீங்கள் பெற்ற ஓய்வூதியப் பங்களிப்பை (EPS corpus) திரும்பப் பெறலாம். வேலை இல்லாத காலங்களில், படிவம் 10C (Form 10C) மூலம் உங்கள் EPS தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். இந்தத் தொகையை எடுத்துவிட்டால், உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.
சமீபகாலமாக, உயர் ஓய்வூதியம் திட்டத்திற்கு பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இதில் உங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து அதிக பங்களிப்பு செய்ய ஒப்புக்கொண்டால், ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் மாத ஓய்வூதியத் தொகை அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications

