மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இணைந்து பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறைகளில் சில முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளன. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த மாற்றத்தை தெரிந்து கொள்வது கட்டாயம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புபான ஈபிஎஃப்ஓ கடந்த நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் சோபா கரந்த்லாஜே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் ஈபிஎஃப்ஓ ஒட்டுமொத்தமாக 8.3 கோடிக்கும் அதிகமான கிளைம்களை வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளது என கூறியுள்ளார். முந்தைய நிதியாண்டான 2024-25இல் இது 6 கோடியாக மட்டுமே இருந்தது. டிஜிட்டல் ஆட்டோமேஷன் மற்றும் விரைவான செயலாக்கம் காரணமாக கடந்த ஆண்டில் பெரும்பாலான கிளைம்கள் விரைவாக தீர்த்து வைக்கப்பட்டன என அரசு கூறியுள்ளது.
பொதுவாக பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, சந்தாதாரர்கள் தங்களது வங்கி கணக்கை உறுதிப்படுத்துவதற்காக ரத்து செய்யப்பட்ட காசோலை அதாவது Cancelled Cheque Leaf அல்லது வங்கி பாஸ்புக்கின் நகலை அப்லோட் செய்வது கட்டாயமாக இருந்தது.
ஆனால், தற்போதைய புதிய விதிகளின்படி, இந்த ஆவணங்களை அப்லோட் செய்யும் முறை முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. அதாவது பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என விண்ணப்பம் செய்பவர்கள் கேன்சல்டு செக் அல்லது வங்கி பாஸ்புக் நகலை இனி பதிவேற்றம் செய்ய தேவையில்லை. இது கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.
முறையான டிஜிட்டல் முறை மற்றும் NPCI சரிபார்ப்பு மூலம் வங்கி கணக்கு விவரங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்படுவதால், கூடுதல் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க தேவையில்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் அளித்த பதிலில் கூறியுள்ளது.
இந்த எளிய நடைமுறை மாற்றத்தால் சுமார் 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். சில சமயங்களில் காசோலை சரியாக ஸ்கேன் செய்யப்படாமல் அதில் உள்ள எழுத்துக்கள் தெரியவில்லை என்பதையே காரணமாக கூறி கிளைம்கள் நிராகரிக்கப்படுமாம். ஆனால் இந்த ஒரு மாற்றத்தால் விண்ணப்பம் நிராகரிப்பு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
அவசரத் தேவைகளுக்கான கிளைம்கள் தானியங்கி முறையில் மிக விரைவாக தீர்க்கப்பட்டு சந்தாதாரர்களின் வங்கி கணக்குகளுக்கு வரவு வைக்கப்படுகின்றன என அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் மற்றும் தானியங்கி கிளைம் தீர்வு முறைகள் பிஎஃப் சேவைகளை விரைவுபடுத்தியுள்ளது. குறிப்பாக கிளைம்கள் நிராகரிக்கப்படுவது குறைந்து, நிலுவையில் உள்ள கோரிக்கைகளும் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்றன என அரசு தெரிவித்துள்ளது.
விரைவில் ஈபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் மூலம் பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வர இருக்கிறது. இது வந்துவிட்டால் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நொடிப்பொழுதில் எடுத்து பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications

