மாதச் சம்பளம் பெறும் பலர் EPFO அமைப்பில் இணைந்திருப்பீர்கள். அப்படி இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் பணிபுரியும் நபரின் சம்பளத்திலிருந்து PF தொகை டிடெக்ட் செய்யப்படும். இதனால் தங்கள் கைக்கு வரும் சம்பளம் குறைகிறதே! என்று பலர் வருத்தப்படுகின்றனர். ஆனால் உண்மையில் PF தொகை, சம்பளம் பெறுபவரின் ஓய்வு காலத்திற்கு அரசு தரும் சிறந்த பாதுகாப்பு என்றால் அது மிகையாகாது.

இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா?: உங்கள் சம்பளத்தில் எவ்வளவு PF டிடெக்ட் செய்யப்படுகிறதோ? அதே போலவே நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்தும் அதே அளவு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் உங்களுடைய சேமிப்பு கிடுகிடுவென அதிகரிக்கிறது. இப்படி முக்கியமான வாழ்நாள் சேமிப்பில் நாம் செய்யும் சிறு அலட்சியம் பின்னாளில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். அது குறித்து இந்தப் பதிவில் தெளிவாக பார்ப்போம்.
வேலையில் சேர்ந்த தேதி மற்றும் பணியிலிருந்து விலகிய தேதி: உங்கள் PF கணக்கில் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள், ஒன்று நீங்கள் வேலையில் சேர்ந்த தேதி. இதை ஆங்கிலத்தில் டேட் ஆஃப் ஜாயினிங் என்று கூறுவார்கள். மற்றொன்று வேலையிலிருந்து நீங்கள் விலகிய தேதி. இதை டேட் ஆஃப் எக்ஸிட் என்று அழைப்பார்கள்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இதற்கு சில விதிகளை வகுத்துள்ளது. இந்த இரண்டு தேதிகளிலும் ஏதேனும் குளறுபடி இருந்தால் அது உங்கள் மொத்த PF பேலன்ஸ், அதற்கு கிடைக்க வேண்டிய வட்டி மற்றும் பென்ஷன் தொகையை பாதிக்கும்.
சிலர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பணியில் இருந்து விலகிய தேதியைப் பற்றி கவலைப்படாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். உங்களுடைய பிஎஃப் அக்கவுண்ட்டை மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற பிஎஃப் ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் பழைய நிறுவனத்திலிருந்து வேலையை விட்ட தேதி மற்றும் புதிய நிறுவனத்தில் சேர்ந்த தேதி ஆகியவற்றை தெளிவாக வழங்க வேண்டும்.
தேதி தவறானால் என்ன நடக்கும்?: நீங்கள் தவறான டேட் ஆஃப் எக்ஸிட்டை குறிப்பிட்டால் அதில் பல பிரச்சினைகள் ஏற்படும். உதாரணமாக பென்ஷன் பெறுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ஒரு நபர் பணிபுரிந்தாக வேண்டும். அப்படி இருக்க டேட் ஆஃப் ஜாயினிங் அல்லது டேட் ஆஃப் எக்ஸிட் போன்ற தேதிகள் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், நீங்கள் 10 ஆண்டுகள் உண்மையிலேயே பணிபுரிந்தாலும், EPFO அமைப்பின்படி உங்கள் பணி காலம் குறைவாகக் கணக்கிடப்படலாம். இதனால் உங்கள் பென்ஷன் உரிமை பறிபோக வாய்ப்புள்ளது .அதேபோல பிஎஃப் பணத்தை திடீரென எடுக்க வேண்டும் என்றால் அதற்கும் இது போன்ற தேதிகள் சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சிஸ்டம் உங்களுடைய விண்ணப்பத்தை நிராகரித்துவிடும்.
அதனால் தான் பணியிலிருந்து ரிசைன் செய்த பிறகு டேட் ஆஃப் எக்ஸிட் தேதியை சரியாக குறிப்பிட வேண்டும். அதன் பிறகு புதிய நிறுவனத்தில் இணைந்தால் டேட் ஆஃப் ஜாயினிங் தேதியை வழங்க வேண்டும். ஒருவேளை இந்த விவரங்களை எல்லாம் நீங்கள் வழங்கவில்லை என்றால் நீங்கள் 2 நிறுவனங்களில் வேலை பார்த்தது போல கணக்காகிவிடும். இது தேவையற்ற விசாரணை மட்டுமின்றி கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கிவிடும்.
EPF உறுப்பினர்களுக்கான புதிய வசதி: இதற்கு முன்னர் உங்களுடைய பிஎஃப் கணக்கில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் அதற்கு பிஎஃப் அலுவலகத்திற்கோ அல்லது நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இப்போது அனைத்தும் டிஜிட்டல் மையமாகிவிட்டது. ஜனவரி 2025 முதல் ஆதார் இணைக்கப்பட்ட UAN வைத்திருந்தால் டேட் ஆப் எக்ஸிட் தேதியை ஆன்லைனிலேயே ஒருவர் அப்டேட் செய்து கொள்ளலாம்.
எனவே EPF உறுப்பினர்கள் உங்களுடைய கணக்கை சரியாக நிர்வகிக்க தவறாதீர்கள்! கஷ்டப்பட்டு உழைத்து, அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால் வேலையை மாற்றும்போது மற்றும் புது நிறுவனத்தில் சேரும்போது தேதியை சரியாகக் குறிப்பிட மறவாதீர்கள்!


Click it and Unblock the Notifications