கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மக்களை பாதுகாக்க, சுமாராக 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்தது மத்திய அரசு.
அதில் மிகவும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஜன் தன் திட்டத்தின் கீழ் இணைந்து இருக்கும் பெண்களுக்கு பணம் கொடுக்கும் திட்டம்.
மாதம் ஒன்றுக்கு 500 ரூபாயை மத்திய அரசு ஜன் தன் திட்டத்தில் இணைந்து இருக்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் போட்டுவிடும் என்றார்கள்.
முதல் தவணை
கடந்த ஏப்ரல் 09, 2020 வியாழக் கிழமை தான், மத்திய அரசு, ஜன் தன் திட்டத்தின் கீழ் இணைந்து இருக்கும் பெண்களுக்கு. கொரோனா வைரஸுக்காக 500 ரூபாயை, ஏப்ரல் மாதத்துக்கு, முதல் தவணையை டெபாசிட் செய்து இருப்பதாக நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைத் துறை சொன்னது.
வதந்தி
கொரோனா வைரஸை எதிர் கொள்ள, மத்திய அரசு ஏப்ரல் மாதத்துக்கு கொடுத்த முதல் 500 ரூபாய் வந்து சேர்வதற்குள், யாரோ ஒருவர், "மத்திய கொடுத்த 500 ரூபாயை உடனடியாக எடுக்கவில்லை என்றால் அரசு, அந்த பணத்தை மீண்டும் அரசு எடுத்துக் கொள்ளும்" என கிளப்பிவிட்டு இருக்கிறார்.
மக்கள் கூட்டம்
இப்படி யாரோ ஒரு விஷமி கிளப்பிவிட்ட வதந்தியால், மக்கள் சமூக விலகளை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, வங்கிகளுக்கு படை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தியாவிலேயே ஜன் தன் திட்டத்தின் கீழ் அதிக அளவிலான வங்கிக் கணக்குகள் எஸ்பிஐ வங்கியில் தான் திறக்கப்பட்டு இருக்கின்றன.
நிதி சேவைகள் துறை
இந்த வதந்தியை கவனத்தில் கொண்டு மத்திய அரசின் நிதி சேவைகள் துறை தன் தரப்பு விளக்கத்தைக் கொடுத்து இருக்கிறது. "அரசு 500 ரூபாயை, ஜன் தன் திட்டத்தில் இணைந்து இருக்கும் பெண்கள் வங்கிக் கணக்குகளுக்கு டெபாசிட் செய்து விட்டது. இந்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதே போல, மத்திய அரசு, அடுத்த மே மாதமும், அதற்கு அடுத்த ஜூன் மாதமும் பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும். அதையும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்" எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறது.
வங்கிகள்
நிதி சேவைகள் சொன்ன விளக்கத்தை, பொதுத் துறை வங்கிகள் எல்லாம், தங்கள் ட்விட்டர் பக்கத்திலும் விளக்கி, வதந்தியை நம்ப வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள். உதாரணமாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தன் டிவிட்டர் பகக்த்தில் வதந்தியை நம்ப வேண்டாம் என பதிவிட்டிருக்கும் கருத்தை காண க்ளிக் செய்யவும்.