கொரோனா வைரஸை எந்த ஒரு தனிப்பட்ட நாடும் தனியாக எதிர்த்து நின்று சமாளிக்க முடியவில்லை. எத்தனை லட்சம் கோடி கொட்டினாலும் கொரோனாவை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.
உலக நாடுகளுக்கு எல்லாம் பெரிய தாதாவாக திகழும், அமெரிக்காவுக்குக் கூட, கொரோனா நோயாளிகளுக்கான மருந்து விஷயத்தில் இந்தியாவின் உதவி தேவைப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த நேரத்தில், இந்தியாவில் இருக்கும் வியாபாரிகள், வியாபாரங்கள் மற்றும் அதிகம் சம்பாதிக்கும் தனி நபர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம்.
வரி ரீஃபண்ட் பாக்கி
கடந்த 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகிவிட்டது. வியாபாரிகளுக்கு முறையாக அரசு ரீஃபண்ட் கொடுக்க வில்லை எனச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அரசிடமும் போதிய வருவாய் இல்லாததால் ரீஃபண்ட் விஷயத்தை அதிகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது கண்டு கொள்ளத் தொடங்கி இருக்கிறது அரசு.
ரீஃபண்ட்
வருமான வரித் துறை, சுங்க வரி, சரக்கு மற்றும் சேவை வரி என எதில் எல்லாம் வரி ரீஃபண்ட்களை, அரசு கொடுக்க வேண்டி இருக்கிறதோ, அந்த ரீஃபண்ட் தொகைகளை எல்லாம் இப்போது கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்களாம். யாருக்கு எல்லாம் இந்த ரீஃபண்ட் பொருந்தும், எத்தனை பேர் பயன் அடைவார்கள்?
5 லட்சம்
வருமான வரித் துறையினர், ஐந்து லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டிய ரீஃபண்ட் தொகைகளை எல்லாம் உடனடியாகக் கொடுக்க, மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறார்களாம். இது தனி நபரோ அல்லது வியாபார நிறுவனங்களோ யாராக இருந்தாலும் பொருந்துமாம். இதனால் சுமார் 14 லட்சம் வரி செலுத்துபவர்கள் பயன் அடைவார்களாம்.
சுங்கம் & ஜிஎஸ்டி
அதே போல சுங்க வரி ரீஃபண்ட் தொகைகளையும் கொடுக்க வேண்டியவர்களுக்கு ரீஃபண்ட்களை கொடுக்க நிதி அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறதாம். அதே போல, சரக்கு மற்றும் சேவை வரி ரீஃபண்ட் தொகைகளையும் விரைவில் கொடுக்க அரசு தரப்பு முடிவு செய்து இருக்கிறார்களாம். இதனால் சுமார் 1 லட்சம் வியாபாரிகள் பயன் அடைவார்களாம். இந்த மொத்த ரீஃபண்ட் தொகை சுமாராக 18,000 கோடி வருமாம். வருமான வரித் துறை பகிர்ந்த அந்த ட்விட்டைக் காண க்ளிக் செய்யவும்.
கொரோனா
கொரோனா வைரஸ், இந்தியா மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த உலகத்தையும் சும்மா சுத்தி சுத்தி அடித்துக் கொண்டு இருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில், இந்தியர்களுக்கு ஓரளவுக்காவது இந்த ரீஃபண்ட் தொகைகள் உதவியாக இருக்கும். ஆனால் அப்படியே வேலை இழந்தவர்கள் மற்றும் கொரோனாவால் வேலையை இழக்க இருப்பவர்களுக்கும் ஏதாவது திட்டத்தை அறிவித்தால் இன்னும் உதவியாக இருக்கும். நிதி அமைச்சர் செய்வார் என நம்புவோம்.