இந்தியர்களிடையே சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு பல முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது சுகன்யா சம்ரிதி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரங்கள் பற்றி தான்.
இந்த திட்டங்கள் சந்தை அபாயம் இல்லாத, நிலையான வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான திட்டங்களாகும்.
மேற்கண்ட இந்த திட்டங்களில் முதலீடு செய்யும்போது, முதலீட்டாளார்களை ஊக்குவிக்கும்போது, வரிச்சலுகையும் கிடைக்கும். இந்த திட்டங்களில் மற்ற திட்டங்களை காட்டிலும் வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், பாதுகாப்பானதாக பாரப்படுகிறது.
சுகன்யா சம்ரிதி திட்டம்
நாம் பார்க்கவிருக்கும் முதல் திட்டம் சுகன்யா சம்ரிதி திட்டம்.
சுகன்யா சமிர்தி யோஜனா திட்டம், பெற்றோர்களுக்கு தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பாதுகாக்க ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டம் மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும் இந்த எஸ்எஸ்ஒய் கணக்கை துவக்க முடியும்.
இதன் முதிர்வு காலம் 21 வருடமாகும்.
தற்போதைய நிலவரப்படி இதற்கான வட்டி விகிதம் 7.6% ஆகும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் வருடத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம்.
சுகன்யா சமிர்தி யோஜனா திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
அரசின் இந்த திட்டத்தில் பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகே முன் கூட்டியே கணிசமான திரும்ப பெற முடியும்.
ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS), அரசின் திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்புத் திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.
இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான்.
அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது.
இந்த சேமிப்பு திட்டத்திற்கு தற்போதைய நிலவரப்படி வட்டி 7.40% ஆக இருந்தது.
இந்த திட்டத்தில் உங்களது முதலீடு 9 வருடங்களில் இரட்டிப்பு ஆகின்றது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டு தொகுப்புகளாக தொடர்ந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம்.
தற்போது இந்த திட்டத்தில் 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் முதலீட்டு தொகை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது.
கிசான் விகாஸ் பத்திரம் (KVP)
இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான சேமிப்பு திட்டம் தான் கேவிபி என்ற கிசான் விகாஸ் பத்திரம். இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 6.9% வழங்கப்படுகிறது.
இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை.
நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது.
அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய 18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும், இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான்.
இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு தேவையில்லை. ஒரு குழந்தை அல்லது முதியவர்களுடனும் இணைந்தும் முதலீடு செய்யலாம்.
இந்த பத்திரத்தினை அறக்கட்டளைகள் கூட வாங்கலாம்,
இந்த கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்கும், மற்ற திட்டங்களை போல் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகு எடுக்கும்போது டிடிஎஸ் விலக்கு அளிக்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு பத்திரம் (NSC)
தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும்.
இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.
குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை.
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையை, வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.
தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 6.8% ஆகும்.
இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்துள்ளீர்கள் எனில், 5 வருடம் கழித்து, உங்களது முதலீடு 1389.49 ரூபாயாக அதிகரிக்கும். இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.