மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் 2021ல் அறிவித்த வருமான வரி விதிகளில் சில மாற்றங்களை அறிவித்தார். இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.
ஆக அரசின் அந்த புதிய வரி விதிகள் என்னென்ன? இந்த புதிய வரி விதிகளினால் யாருக்கு என்ன லாபம்? என்ன பாதகம் என்பதனைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கிறோம்.
குறிப்பாக மாத சம்பளதாரர்களுக்கு இது எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.
வருங்கால வைப்பு நிதியில் வரி மாற்றங்கள்
அந்த வகையில் நாம் முதலில் பார்க்க விருப்பது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்தான வரி மாற்றத்தினைத் தான். ஒரு நிதியாண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கும் வரி விகிதம் உண்டு. பொதுவாக இந்த திட்டத்தில் வரி சலுகை உண்டு என்பதால் தான் பலரையும் இது ஈர்க்கிறது. ஆனால் அரசின் இந்த வரி விதிப்பினால் இந்த சேமிப்பு குறையலாம்.
வரி செலுத்த வேண்டியிருக்கும்
இந்த திட்டம் குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு பிரச்சனை இல்லை என்றாலும், அதிக சம்பளம் வாங்குவோருக்கு பிரச்சனை தான். அதாவது மாதத்திற்கு 20,833 ரூபாய்க்கு மேல் பி.எஃப். செலுத்துபவர்கள் இதனால் பாதிப்படைவார்கள். ஏனெனில் ஊழியரின் பங்களிப்பு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாயை விட அதிகமாக இருக்கும். அதாவது 1,73,608 ரூபாய்க்கு மேல் அடிப்படை மாத சம்பளம் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஒரு வருடத்தில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பி.எஃப் பங்களிப்பு இருக்கும், எனவே அவர்கள் அந்த கூடுதல் தொகையில் சம்பாதித்த வட்டிக்கு வரி செலுத்துவார்கள்.
டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ்
வருமான வரி தாக்கலை அதிகரிக்க பட்ஜெட்டில் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் ஆகியவற்றை பற்றி நிதியமைச்சர் அறிவித்தார். அதோடு வருமான வரி சட்டத்தில் 206AB மற்றும் 206CCA ஆகியவற்றை முன்மொழிந்தார். இதில் ரூ.50 லட்சத்திற்கு மேல் கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு, 0.1 சதவீதம் டி.டி.எஸ். (Tax Deducted at Source) பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பெரிய தொகை இல்லையென்றாலும், வரிதாரர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தவே செய்யும்.
வருமான வரி தாக்கல் செய்யத் தேவையில்லை
75 மற்றும் அதற்கு அதிகமாக வயதுடைய மூத்த குடிமக்களுக்குப் பென்ஷன் மற்றும் வங்கி வட்டி வருமானம் மட்டுமே வருடாந்திர வருமானமாக இருக்கும் பட்சத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை. எனினும் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஐடிஆர் தாக்கல்
வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது சம்பள வருமானம், வங்கி கணக்கு, வரி செலுத்திய தகவல், டிடிஎஸ் விபரம் ஆகியவை முன்கூட்டியே பதிவிட்டு இருக்கும் நிலையில், தற்போது மூலதன ஆதாயங்கள், டிவிடெண்ட் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி வருமானம், போஸ்ட் ஆபீஸ்-ல் இருந்து கிடைத்த வருமானம் ஆகியவற்றையும் நேரடியாக வருமான வரி அறிக்கையில் சேர்க்கப்படும்.
இனி இதை முன் கூட்டியே செய்ய வேண்டியதில்லை
வருமான வரி செலுத்துவோர் இனி முன்கூட்டிய வரி செலுத்தும் போது அவர்களுக்கு, கிடைக்கும் ஈவுத்தொகை (Dividend) வருமானத்தை முன்கூட்டியே கணக்கிட்டு வரி செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் பணத்தை அரசுக்குச் செலுத்துவதைத் தடுக்க முடியும்.