மார்ச் மாதம் தொடங்கி இன்றுடன் இரண்டு நாள் தான். ஆனால் மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய அவசியமான 5 அவசியமான வேலைகள் பல உள்ளன. அவற்றை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
மார்ச் மாதம் கடைசி என்பது வெறும் நிதியாண்டு முடிவு மட்டும் அல்ல, பற்பல அறிவிப்புகளுக்கும் கடைசி நாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அப்படி என்னென்ன அவசியமான விஷயங்கள் உள்ளன. நினைவில் கொள்ள வேண்டியவை எவை? இதனை செய்யாவிட்டால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாருங்கள் பார்க்கலாம்.
வருமான வரி தாக்கல், பான் - ஆதார் இணைப்பு, வங்கி கணக்கில் KYC அப்டேஷன் என பலவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களாக உள்ளன.
வருமான வரி தாக்கல்
கடந்த 2021 - 2022ம் ஆண்டுக்கான தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடுவானது மார்ச் 31, 2022 ஆகும். ஆக வருமான வரி தாக்கல் செய்ய தவறியவர்கள் இதனை மார்ச் 31க்குள் தாக்கல் செய்து கொள்ளலாம்.
இதே 2020 - 21 நிதியாண்டிற்கான தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு மார்ச் 31, 2021 ஆகும். ஆனால் வருமான வரி தாக்கல் செய்வோர் தாமதமாக தாக்கல் செய்திருந்தால், அவர் அதனை மார்ச் 31, 2022க்குள் திருத்தம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக ஒரு வேலை ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை மார்ச் 31, 2022க்குள் ஆன்லைனிலேயே சரி செய்து கொள்ளலாம்.
ஆதார் பான் இணைப்பு
ஆதார் பான் இணைப்புக்கான கடைசி தேதியும் மார்ச் 31, 2022 தான். ஆக இது வரையில் பான் ஆதார் இணைப்பு செய்யாதவர்கள் அதற்குள் செய்து கொள்ளலாம். ஓரு வேளை நீங்கள் அப்டேட் செய்யாவிட்டால், மார்ச் 31க்கு பிறகு உங்களது பான் கார்டு செயலற்று போகலாம். அது மட்டும் அல்ல 272பி பிரிவின் கீழ்10,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படலாம். வங்கி வைப்பு நிதிகளுக்கு கிடைக்கும் வட்டிக்கான டிடிஎஸ் விகிதமும் இரட்டிப்பாகலாம்.
kYC அப்டேட்
வங்கிகளில் கே.ஒய்.சி ஆவணங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவு. இதனால் பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்க முடியும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவது மிக அவசியமாகிறது என்று ரிசர்வ் வங்கி கூறுகின்றது. முன்னதாக இதனை அப்டேட் செய்ய டிசம்பர் 31,2021 காலக்கெடுவாக நிர்ணயித்திருந்தது. ஆனால் ஓமிக்ரான் அச்சம் காரணமாக மார்ச் 31, 2022 வரையில் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அப்படி செய்யாவிடில் உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்படலாம். ஏனெனில் ஏற்கனவே அரசு பலமுறை எச்சரித்தும், கால அவகாசமும் கொடுத்துள்ளது.
முன் கூட்டியே வரி செலுத்துதல்
பிரிவு 208ன் கீழ் ஒரு ஆண்டுக்கு வரி 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்டு வரி செலுத்தும் ஒவ்வொருவரும் தனது வரியினை முன் கூட்டியே செலுத்த வேண்டும். இதனை 4 தவணைகளில் செலுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் முதல் தவணைக்கான காலக்கெடுவாக ஜூன் 15ம், இரண்டாவது தவணைக்கான காலக்கெடுவாக செப்டம்பர் 15ம், மூன்றாவது தவணைக்கு டிசம்பர் 15ம், 4வது தவணைக்கு மார்ச் 15ம் காலக்கெடுவாகும். ஆக தற்போது 4வது தவணைக்கான காலகெடு மார்ச் 15 என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
வரி சேமிப்பு முதலீடுகள்
சிலர் தங்களது சேமிப்பு மூலம் வரிச் சலுகையை பெறவே சில முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வர். உதாரணத்திற்கு என்பிஎஸ், பிபிஎஃப், இ.எல்.எஸ்.எஸ் உள்ளிட்ட திட்டங்கள். நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அப்படி ஏதும் திட்டமிட்டிருந்தால், முதலீடு செய்துள்ளீர்களா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். எனினும் இந்த திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் செய்யப்படுவதால் அவசரப்படாமல், நிதானமாக முடிவு செய்வது நல்லது.