மத்திய ரிசர்வ் வங்கியின் கணக்குப் படி, வங்கிகள் கடன் கொடுத்து இருக்கும் 100 லட்சம் கோடி ரூபாயில் சுமாராக 38.68 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான தவணைகள் EMI Moratorium-த்தில் இருக்கலாம் எனக் கணித்து இருக்கிறது.
தனியார் வங்கிகளோ, தங்களின் மொத்த கடனில் சுமாராக 25 - 30 சதவிகித கடன்களுக்கான தவணைகள் EMI Moratorium-த்தில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
அரசு வங்கிகளோ, தங்களின் மொத்த கடனில் சுமாராக 65 சதவிகித கடன்களுக்கான தவணைகள் EMI Moratorium-த்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பிரச்சனை வரலாம்
இந்த EMI Moratorium வசதியைப் பயன்படுத்தி, வாங்கி இருக்கும் கடன்களுக்கான தவணைகளைச் செலுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள், மீண்டும் கடன் கேட்டு வங்கியின் வாசற் படியை மிதிக்கும் போது, கடன் கிடைப்பதில் சிக்கல் வரலாம் என பிசினஸ் டுடே, தன் வலைதளத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
என்ன பிரச்சனை
ஏற்கனவே EMI Moratorium பெற்ற மாதங்களுக்கும் சேர்த்து, கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் தான் வட்டியைச் செலுத்த வேண்டும். அது போக, EMI Moratorium பயன்படுத்தியதால், அந்த வாடிக்கையாளர்களை அதிக ரிஸ்கு உள்ள வாடிக்கையாளர்களாக வங்கிகளும், க்ரெடிட் ஸ்கோர் கணக்கிடும் அமைப்புகளும் குறித்து வைத்துக் கொள்வார்கள். எனவே புதிதாக கடன் கேட்டு போகும் போது கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள்.
வங்கி கணக்கு
ஆர்பிஐ கொடுத்து இருக்கும் EMI Moratorium வசதியைப் பயன்படுத்திக் கொள்வதால் வாடிக்கையாளர்களின் க்ரெடிட் ஸ்கோர் குறையக் கூடாது. ஆனால் EMI Moratorium வாங்கி இருக்கிறார் என்கிற ஒரு விஷயமே, வங்கிகள், வருங்காலத்தில் அவர்களுக்கு கடன் கொடுப்பதை மறுக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என பிசினஸ் டுடே செய்தியில் சொல்லி இருக்கிறார்கள்.
EMI Moratorium-ல் என்ன பிரச்சனை
ஒரு வாடிக்கையாளர், EMI Moratorium பயன்படுத்தி கடன் தவணைகளை ஒத்திப் போடுகிறார் என்றால், அவரின் பணப் புழக்கத்தில் பிரச்சனை இருப்பதாகத் தானே பொருள். எனவே தான், வங்கிகள் EMI Moratorium சலுகையை பயன்படுத்திக் கொண்ட வாடிக்கையாளர்கள், எதிர் காலத்தில் கடனுக்கு விண்ணப்பித்தால் மறுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
தனி டேட்டா
தற்போது வங்கிகள் TransUnion CIBIL, Experian, Equifax, CRIF Highmark என பல க்ரெடிட் ஸ்கோர் அமைப்புகளிடம் இருந்து வரும் வாடிக்கையாளர்களின் விவரங்களின் அடிப்படையில் தான் கடன் கொடுக்கிறார்கள். இந்த அமைப்புகளும் வாடிக்கையாளர் EMI Moratorium சலுகையை பெற்று இருக்கிறாரா இல்லயா என்பதையும் எளிதில் தனியாக பிரித்து எடுத்துவிடுவார்களாம். இனி வங்கிகள் EMI Moratorium விவரங்களை க்ரெடிட் ஸ்கோர் கொடுக்கும் அமைப்புகளிடம் இருந்தே பார்த்து கடன்களைக் கொடுக்கத் தொங்குவார்கள்.
அரசு தான் கவனிக்க வேண்டும்
ஒரு பக்கம், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க, அரசு தான் EMI Moratorium அறிவித்தது. ஆனால் இன்னொரு பக்கம், அந்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டால், எதிர் காலத்தில் கடன் கிடைப்பதிலேயே சிரமம் ஏற்படலாம் எனச் செய்திகள் வெளியாகிறது. இதை மத்திய அரசு தான் கவனத்தில் எடுத்துக் கொண்டு மக்களுக்கு மன நிம்மதி கொடுக்க வேண்டும்.