கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நல்ல லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் முதலீடு என்றால் அது தங்கம் தான்.
இப்படி ரொம்ப நல்ல வாய்ப்புக்கு இடையில் தங்கத்திற்கு செய்கூலி, சேதாரம் கிடையாது என்றால் வேண்டாம் என்றா கூற முடியும். இது முதலீட்டாளர்களுக்கு ஒரு ஜாக்பாட் தான்.
அந்த வகையில் செய்கூலி, சேதாரம் இல்லாத பாதுகாப்பான பேப்பர் தங்கம் பற்றித் தான் பார்க்க போகிறோம். அது ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை தான்.
தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு
கடந்த மாதத்தில் தொடர்ந்து தங்கம் விலையானது அனுதினமும் புதிய உச்சத்தினை தொட்டு வந்தது. ஆனால் தற்போது அதன் வேகம் சற்று குறைந்துள்ளது. எனினும் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதன் காரணமாக ஆர்பிஐ-யின் தங்க பத்திர திட்டம் நல்ல லாபம் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிகல் தங்கம் வேண்டாம்
பொதுவாக நம்மவர்கள் தங்கத்தினை வாங்கும்போது நகையாகத் தான் அதிகம் வாங்கி வைப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறிக் கொண்டுள்ளது. செய்கூலி, சேதாரத்திற்கு செலவிடுவதை குறைப்பதற்காக, பேப்பர் தங்கத்தினை நாட தொடங்கியுள்ளனர். ஆக தங்கம் சார்ந்த ஃபண்டுகள், தங்கம் பத்திரம் என அனைத்திலும் நாளுக்கு நாள் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. நிபுணர்களும் இதனையே பரிந்துரைக்கின்றனர்.
கடைசி தேதி என்ன?
ஆறாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திர விற்பனையானது கடந்த ஆகஸ்ட் 31 அன்று தொடங்கியது. இன்றே இதற்கு கடைசி நாளாகும். கடைசி நாளாக சொல்கிறார்களே எப்படி வாங்குவது என யோசிக்கலாம். ஆனால் இதனை ஆன்லைனில் தானே வாங்க போகிறோம். ஆக நிமிடங்களில் நாம் வாங்கி வைக்க முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற முடியும். அரசும் இதனைத் தான் ஊக்குவிக்கிறது
விலை நிர்ணயம் எவ்வளவு?
இன்றுடன் முடிவடைய உள்ள இந்த தங்க பத்திரத்தின் விலையானது கிராமுக்கு 5,117 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக இந்த பத்திர கொள்முதலுக்கு பணம் செலுத்திக் கொள்பவர்களுக்கு 50 ரூபாய் தள்ளுபடியுடன் 5,065 ரூபாயுக்கும் கிடைக்கும். இதே இதற்கு முந்தைய ஐந்தாவது தங்க பத்திர விற்பனையின் போது விலையானது 5,334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எவ்வளவு முதலீடு செய்து கொள்ளலாம்?
பொதுவாக ஒரு நிதியாண்டில் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை இந்த இறையாண்மை பத்திரங்களில் முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்களை இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்து கொள்ளலாம்.
பிணையமாக வைத்து கடன் வாங்கலாம்
இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் சாதாரண தங்கத்தினைப் போலவே, நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் மிக நம்பிக்கையான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
எவ்வளவு வட்டி?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.