பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு அரசு அறிவித்த ஒரு திட்டம் தான் அரசின் இறையாண்மை தங்க பத்திர திட்டம். இது தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
பொதுவாக தங்கம் முதலீடு என்றாலே கவர்ச்சிகரமான முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது. என்ன தான் விலை அதிகரித்தாலும் தங்கத்தில் கொஞ்சமேனும் முதலீடு செய்வதனை நம் மக்கள் பழக்கமாக கொண்டுள்ளனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு இது சரியான ஜாக்பாட் காலம் என்றே கூறலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
சிறந்த முதலீடு
இந்த நிலையில் தான் தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. அது சர்வதேச சந்தையானலும் சரி, இந்திய கமாடிட்டி வர்த்தகமானாலும் சரி. இந்த நிலையில் தான் ஆர்பிஐ தங்க பத்திர விற்பனையானது கடந்த ஜூலை 6 அன்றே தொடங்கியுள்ளது. இந்த முதலீட்டு திட்டமானது தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த முதலீடாகவே பார்க்கப்படுகிறது.
கடைசி தேதி என்ன?
நான்காம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரத்தினை வாங்க கடைசி தேதி ஜூலை 10 ஆகும். அதன் பிறகு ஜூலை 14 அன்று இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வளவு முதலீடு செய்து கொள்ளலாம்?
பொதுவாக ஒரு நிதியாண்டில் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
பிணையமாக வைத்து கடன் வாங்கலாம்
இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன.
எவ்வளவு வட்டி?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டீடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
கேபிட்டல் டேக்ஸ்
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் போடப்பட மாட்டாது. எட்டு வருடம் வரை நீடிக்க முடிய வில்லை என்றால்- நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பது கவனிக்கதக்கது.
அடுத்த சீரிஸ் எப்போது?
சீரிஸ் 5
சந்தா தேதி ஆகஸ்ட் 03 - 07, 2020, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஆகஸ்ட் 11, 2020
சீரிஸ் 6
சந்தா தேதி ஆக்ஸ்ட் 31 - செப்டம்பர் 04. 2020, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி செப்டம்பர் 08, 2020
தங்க நகைகளாக வாங்கி, அதற்கு செய்கூலி, சேதாரம் என செலுத்துவதை விட, இது போன்று தங்க பத்திரங்கள் வாங்கி வைப்பது நல்ல லாபத்தினையும் கொடுக்கும். செலவினையும் குறைக்கும்.