உலகமே கொரோனா என்னும் அலையால் தத்தளித்து வந்தாலும், இன்றும் சந்தையில் சுறுசுறுப்பாக லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் ஒரு முதலீடு என்றால் அது தங்கம் தான்.
அதுவும் தங்கத்திற்கு செய்கூலி, சேதாரம் கிடையாது என்றால் வேண்டாமென்றா கூற முடியும்.
பேப்பர் தங்கம் என்று அழைக்கப்படும் தங்க பத்திர விற்பனை பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். அதுவும் இந்த நெருக்கடியான காலகட்டங்களில் மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுவதோடு, கவர்ச்சிகரமான பாதுகாப்பு முதலீடாக பார்க்கப்படுவது தங்கம் தான்.
தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரையில் தங்கம் விலையானது அனுதினமும் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், தற்போது சற்று அதன் வேகம் குறைந்துள்ளது. எனினும் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக தங்க பத்திர திட்டம் நல்ல லாபம் கொடுக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
பிசிகல் தங்கம் வேண்டாம்
பொதுவாக நம்மவர்கள் தங்கத்தினை வாங்கும்போது நகையாகத் தான் அதிகம் வாங்கி வைப்பார்கள். ஏனெனில் அது அவசர காலத்திற்கு சிறந்த பயனாக இருக்கும் என்று. கையில் சிறிது காசு கிடைத்தாலும், அதில் 1 கிராம் தங்கமேனும் வாங்கிவைத்து விட வேண்டும் என எண்ணுபவர்கள் இங்கு ஏராளம். உங்கள் வருங்கால சந்ததியினருக்கு தங்கத்தினை வாங்கி வைப்பதினை விட, தங்க பத்திரமாக வைக்கும் போது, தங்கம் விலையானது அதிகரிக்க, உங்களின் முதலீட்டின் மதிப்பும் கூடிக் கொண்டே போகிறது.
கடைசி தேதி என்ன?
ஆறாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரத்தினை ஆக்ஸ்ட் 31 முதல் தொடங்க உள்ளது. இதனை செப்டம்பர் 4 வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்றுக் கொள்ள முடியும்.
விலை நிர்ணயம் எவ்வளவு?
நாளை தொடங்கவுள்ள இந்த தங்க பத்திரம் விற்பனையானது, கிராமுக்கு 5,117 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக இந்த பத்திர கொள்முதலுக்கு பணம் செலுத்திக் கொள்பவர்களுக்கு 50 ரூபாய் தள்ளுபடியுடன் 5,065 ரூபாயுக்கும் கிடைக்கும். இதே இதற்கு முந்தைய ஐந்தாவது தங்க பத்திர விற்பனையின் போது விலையானது 5,334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு முதலீடு செய்து கொள்ளலாம்?
பொதுவாக ஒரு நிதியாண்டில் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்து கொள்ளலாம்.
பிணையமாக வைத்து கடன் வாங்கலாம்
இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் நம்பிக்கையான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
எவ்வளவு வட்டி?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
கேபிட்டல் டேக்ஸ்
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் போடப்பட மாட்டாது. எட்டு வருடம் வரை நீடிக்க முடிய வில்லை என்றால்- நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பது கவனிக்கதக்கது.
எப்போது ஆரம்பம்? எவ்வளவு முதலீடு?
இந்த தங்கப் பத்திர முதலீட்டுத் திட்டம் 2015ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டது. அப்போது மொத்தம் 9.14 லட்சம் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு 245 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான கடைசி பத்திர வெளியீடு இதுவேயாகும்.