உலகம் முழுக்க மிக வேகமாக பரவி வரும் கொரோனாவின் காரணமான, இன்றளவிலும் நல்ல லாபம் கொடுத்துக் கொண்டுள்ள முதலீடு தங்கம் தான்.
அதிலும் தற்போது ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இரண்டாம் கட்ட பரவலாக கொரோனா பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கவே, அதுவும் வரலாறு உச்சத்தினை தொடலாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
செய்கூலி சேதாரம் இல்லா தங்கம் முதலீடு
ஆக இப்படி ஒரு இக்கட்டான நிலையில், செய்கூலி சேதாரம் இல்லாமல், நீங்கள் வாங்கி வைக்கும் தங்கத்திற்கு ஏற்ப லாபமும் கிடைக்கும் என்றால், இது மிக நல்ல வாய்ப்பு தானே. அதுவும் இது அரசின் திட்டம் என்றால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? சரி வாருங்கள் தங்க பத்திர முதலீடுகளைப் பற்றி பார்க்கலாம்.
பாதுகாப்பான அரசின் திட்டம்
ஆரம்பத்தில் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, அரசு அறிவித்த ஒரு பாதுகாப்பான திட்டம் தான், இந்த தங்க பத்திர திட்டம். ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. பொதுவாக தங்கம் முதலீடு என்றாலே கவர்ச்சிகரமான முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது. என்ன தான் விலை அதிகரித்தாலும், நம் மக்கள் வாங்குவதை நிறுத்துவதில்லை. ஆக அரசின் முதலீடு, அதுவும் நமக்கு பிடித்த தங்கம் முதலீடு எனும் போது, வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
அரசின் பாதுகாப்பு
ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இத்தகைய நேரத்தில் அரசின் தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு நல்ல ஆப்சன் தான். ஏனெனில் ரிஸ்க்கும் குறைவு, அரசின் திட்டம், பாதுகாப்பு, நல்ல லாபம் இது போதுமே முதலீட்டாளர்களுக்கு.
சிறந்த முதலீடு
சர்வதேச சந்தையானலும், இந்திய கமாடிட்டி வர்த்தகமானாலும் தங்கம் விலையானது அவ்வப்போது குறைந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது விலை ஏற்றத்தில் தான் உள்ளது. அதோடு நிபுணர்களும் நிச்சயம் ஏற்றம் காணும் என்றே கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஆர்பிஐ தங்க பத்திர விற்பனையானது கடந்த அக்டோபர் 12 அன்று தொடங்கியது.
கடைசி தேதி என்ன?
இந்த நிலையில் ஏழாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரத்தினை வாங்க இன்றே கடைசி நாளாகும் ( அக்டோபர் 16). இதற்கான வெளியீடு அக்டோபர் 20, 2020 ஆகும். கடைசி நாளான இன்று எப்படி வாங்க முடியும் என்று கேட்கிறீர்களா? இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் உண்டு.
கிராமுக்கு விலை எவ்வளவு?
இந்த தங்க பத்திர விற்பனையில் கிராமுக்கு 5,051 ரூபாயாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்று 5,001 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒருவர் எவ்வளவு முதலீடு செய்து கொள்ளலாம்?
பொதுவாக ஒரு நிதியாண்டில் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
தங்க பத்திர திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
இந்த தங்கப் பத்திர முதலீட்டுத் திட்டம் 2015ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் அவகாசம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.
வட்டி உண்டா?
அரசின் இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டீடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
கேபிட்டல் டேக்ஸ்
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் போடப்பட மாட்டாது. எட்டு வருடம் வரை நீடிக்க முடிய வில்லை என்றால்- நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பது கவனிக்கதக்கது.
அதெல்லாம் சரி அடுத்த திட்டம் எப்போது?
சீரிஸ் 8
சந்தா தேதி நவம்பர் 09 - 13, 2020, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி நவம்பர் 18, 2020
சீரிஸ் 9
சந்தா தேதி டிசம்பர் 28 - ஜனவரி 1, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜனவரி 05, 2021
சீரிஸ் 10
சந்தா தேதி ஜனவரி 11 - ஜனவரி 15, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜனவரி 19, 2021
சீரிஸ் 11
சந்தா தேதி பிப்ரவரி 1 - 5, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி பிப்ரவரி 9, 2021
சீரிஸ் 12
சந்தா தேதி மார்ச் 1 - 5, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி மார்ச் 9, 2021