அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வரும் வெள்ளிக்கிழமை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து தங்கம், வெள்ளி விலைகள் உயர்வு கண்டுள்ளன. இந்தியாவிலும் சில்லறை விற்பனையில் தங்கம் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 210 ரூபாய் விலை உயர்ந்து 14,070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 1680 ரூபாய் விலை உயர்ந்து 1,12,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,40,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தையில் நகை தயாரிப்பு மற்றும் நகை நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன.

இன்றைய வர்த்தகத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு மதிப்பு 7.85% உயர்ந்து ரூ. 371.80 ஆக வர்த்தகமானது. அதே போல சென்கோ கோல்டு பங்கு மதிப்பு 4.26% உயர்ந்து ரூ.352.75 ஆகியது. பிசி ஜூவல்லர் பங்கு 2.80% உயர்ந்து ரூ9.17 ஆகியது. பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் , டைட்டன் நிறுவனம் ஆகியவற்றின் பங்கு மதிப்புகளும் 1%க்கும் மேல் உயர்ந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பகைமையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு முதற்கட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். வரும் வெள்ளி அன்று ஒப்பந்தம் அதிகாரப்பூர்வ கையெழுத்தாகும் என்றும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும் கூறினார். இதனால் கச்சா எண்ணெய் விலை 4% வரை சரிவை சந்தித்தது.
கச்சா எண்ணெய் விலை சரிந்த உடனே முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடுகளை மேற்கொள்ள தொடங்கினர். இதனால் உலக சந்தையில் தங்கம் விலை 2.5% உயர்ந்து, ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் $4,323.29 என்ற அளவை எட்டியது. இந்த அமைதி ஒப்பந்தத்தால் அமெரிக்க டாலரின் மதிப்பு 10 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. டாலர் மதிப்பு குறையும் போது, பிற நாட்டு நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு தங்கம் வாங்குவது மலிவாகிவிடும், இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும்.
வெள்ளியின் விலை 3.3% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $70.19 ஆகவும், பிளாட்டினம் 2.8% மற்றும் பலேடியம் 3.1% என்ற அளவிலும் உயர்ந்தன. உலகளவில் நிலவி வந்த போர் சூழல் குறைந்து அமைதி ஏற்படுவதால், சந்தையில் நேர்மறையான முதலீட்டுச் சூழல் உருவாகியுள்ளது. தங்கம் போன்ற உலோகங்களின் மதிப்பு அதிகரித்துள்ளதால், நகை நிறுவனங்கள் தங்களின் இருப்பு மதிப்பின் (Inventory Value) மூலம் நல்ல லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனப் பங்குகளை ஆர்வமாக வாங்கியுள்ளனர். தங்கம் விலை உயர்வதால் இந்த நிறுவனங்களின் லாபமும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தங்கம் ஒரு சவரன் வாங்க ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தேவை ஆனால் தங்கம் விற்கும் நிறுவனங்களின் பங்குகளை 300 ரூபாய் முதலே வாங்க முடியும். இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தங்கம் விற்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

