நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனா அலைக்கு மத்தியில் மக்கள் தங்களது வருமானங்களை இழந்துள்ள நிலையில், பல்வேறு தரப்பிலும் பற்பல சலுகைகள், உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நிறுவனங்கள் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நிதியிலான உதவிகளை வழங்கி வருகின்றன.
இதற்கிடையில் ரிசர்வ் வங்கியும் மக்கள் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் வகையில், வட்டி விகிதம் குறைவாகவே உள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
இதன் எதிரொலி வீட்டு கடன் உள்ளிட்ட பல கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக உள்ள நிலையில், வீடுகளில் முதலீடு செய்வோருக்கு வரி விலக்கு கோரும் வருமான வரி சட்டம் 54, 54ஜிபி சலுகையினை, இன்றும் மூன்று மாத காலத்திற்கு வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. இது வீடு வாங்குவோருக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
அரசு சலுகை
நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயின் இரண்டாம் அலைக்கு மத்தியில் வரி செலுத்துவோரின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு முதலீடு செய்வதில் வரி விலக்கு கோருவதற்கான காலக்கெடு நீட்டித்துள்ளது. இது உண்மையில் மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
வீடு வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்
அதாவது 54, 54ஜிபி பிரிவின் கீழ் மூலதன ஆதாயங்களுக்காக ரோல் ஓவர் நன்மை கோருவதற்கான முதலீடு, கட்டுமானம் அல்லது கொள்முதல் செய்வதற்காக தேதியானது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஏப்ரல் 1 அல்லது அதற்கு பிறகு செய்ய வேண்டிய முதலீட்டினை இப்போது செப்டம்பர் 30 வரை செய்யலாம்.
பான் - ஆதாருக்கும் அவகாசம் நீட்டிப்பு
இது தவிர பான் - ஆதார் இணைப்புக்கும் செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிகப்பட்டுள்ளது.
அதோடு கொரோன தொற்று பாதிப்பால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிறவனங்கள் வழங்கும் 10 லட்சம் ரூபாய் வரையிலான இழப்பீட்டு தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை எனவும் மத்திய அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அறிவிப்புகள் நிச்சயம் மக்களுக்கு ஜாக்பாட் தான்.