2020ம் ஆண்டு உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பாடத்தினை புகட்டியுள்ளது எனலாம். குறிப்பாக இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் புது புது நோய்கள் முளைத்து வருகின்றன. இந்த நோய்கள் ஒரு புறம் எனில், அதனை சரிசெய்ய மருத்துவ செலவிற்கே கூட காசு இல்லாமல் அல்லப்படும் மக்கள் ஒரு புறம்.
ஏனெனில் தாங்கள் சம்பாதிக்கும் குறுகிய சம்பளத்தில் பலராலும், ஹெல்த் இன்சூரன்ஸ் என்பதை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.
அரசின் சில இன்சூரன்ஸ் திட்டங்கள்
ஆனால் அப்படியானவர்களுக்கு அரசு சில இன்சூரன்ஸ் திட்டங்களை வைத்துள்ளது. ஆனால் அவற்றை பற்றி பலருக்கும் தெரிவதே இல்லை. அரசின் இந்த திட்டத்தில் பிரீமியமும் குறைவு. அதிக கவரேஜ்ஜீம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அரசின் திட்டம் என்பதால் இது பலருக்கும் உதவிகரமானதாக இருந்து வருகின்றது.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஆயுஷ்மான் பாரத் யோஜனா. ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு அறிமுகப்படுத்திய ஒரு இன்சூரன்ஸ் திட்டம் தான் இந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா. இந்த திட்டமானது சுமார் 1,350 வகையான சிகிச்சைகளுக்கு இந்த நிதியினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையில் பயனைக் பெற்றுக் கொள்ளலாம்.
முதலில் இந்த திட்டத்தில் இணைவதற்கு நீங்கள் தகுதியானவர் தானா என்பதை, https://pmjay.gov.in/ என்ற அரசின் இணையத்தில் சென்று am i eligible என்பதை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் தகுதியானவர் எனில், https://pmjay.gov.in/ என்ற இணைய பகுதிக்கு சென்று லாகின் செய்து கொள்ளுங்கள். தேவையான விவரங்களை பதிவு செய்து கொண்டு சப்மிட் செய்யும் போது, உங்களது பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த ஆயுஷ்மான் பாரத் கார்டினை பெற 30 ரூபாய் நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா எனப்படும் காப்பீடு திட்டமானது, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்துடன் இணைந்து 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
அரசின் இந்த இன்சூரன்ஸ் திட்டம் மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு குறுகிய கால காப்பீட்டு திட்டமாகும். இது விபத்து காரணமாக இறப்போ அல்லது உடல் ஊனமோ ஏற்பட்டால் வழங்கப்படும் ஒரு காப்பீடாகும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் படி, தனி நபர் இறப்பிற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், இதே நிரந்தர ஊனத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், இதுவே உடல் ஊனத்திற்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகின்றது.
ஆனால் இந்த சூப்பரான இன்சூரன்ஸ் திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும் எனில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதோடு இந்தத் இன்சூரன்ஸ் திட்டத்தில் பங்கேற்க 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் இதற்கு தகுதியானவர் எனில், வங்கிகளை அணுகி அதற்கான விண்ணப்பத்தினை கொடுக்கலாம்.
ஆம் ஆத்மி பீமா யோஜனா
அரசின் ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டம் கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் இணைய 18 வயது முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தனது குடும்பத்தின் தலைவராக இருக்க வேண்டும் அல்லது அவரது குடும்பத்தின் ஒற்றை சம்பாதிக்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்க வேண்டும் அல்லது நிலமற்ற கிராமப்புற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் காப்பீட்டுதாரர் இயற்கையான மரணத்திற்கு, காப்பீட்டுதாரருடைய உயிரோடு இருக்கும் நாமினிக்கு அல்லது குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ 30,000 வழங்கப்படும். இதே விபத்து காரணமாக ஒரு காப்பீட்டுதாரர் நிரந்தரமாக உடல் பாகங்கள் செயலிழப்பு அல்லது இறப்பு ஏற்பட்டால் 75,000 ரூபாய் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு பிரீமியம் 200 ரூபாயாகும். இதனை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செலுத்துகின்றன.
இது தவிர இன்னும் சில இன்சூரன்ஸ் திட்டங்களையும் அரசு வழங்கி வருகின்றது. அதனை அடுத்து வரும் கட்டுரைகளில் தெரிந்து கொள்வோம்.