டிஜிட்டல் யுகத்தில் திண்டாடும் நடுத்தர வர்க்கம்:UPI ஆல் காலியாகும் பாக்கெட்: செலவை குறைக்க டிப்ஸ்?

முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்கும் போது, பர்சை திறந்து கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எண்ணி எண்ணிக் கொடுப்போம். அப்போது ஒரு தயக்கம் இருக்கும், செலவு அதிகம் என்றால் கொஞ்சம் குறைத்திருக்கலாமோ என்ற தவிப்பு இருக்கும். இது அடுத்த முறை செல்லும்போது பார்த்து பார்த்து செலவு செய்யத் தூண்டும். ஒரு சேமிப்பு உணர்வு இருக்கும். ஆனால் இன்று அப்படியல்ல, வெறும் ஒரு QR Code-ஐ ஸ்கேன் செய்துவிட்டு ஸ்டைலாக நடந்து போகிறோம். ஆனால் அதன் வலி ஸ்கேன் செய்யும் போது பலருக்கும் தெரிவதில்லை. அதுவே கையில் காசு இல்லாத சமயங்களில் பேலன்ஸ்-ஐ செக் செய்து பார்க்கும் போது வரும்.

டிஜிட்டல் யுகத்தில் திண்டாடும் நடுத்தர வர்க்கம்:UPI ஆல் காலியாகும் பாக்கெட்: செலவை குறைக்க டிப்ஸ்?

இன்றைய காலத்தில் டீக்கடையில் கொடுக்கும் 10 ரூபாய் முதல் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை எளிதாக யுபிஐ மூலம் செல்கிறது. இன்று பணம் என்பது வெறும் எண்களாக மட்டுமே மாறிவிட்டது. கையில் காசு குறையாதது போல் தெரிந்தாலும், வங்கிக் கணக்கில் நம் எதிர்கால கனவுகளுக்காக சேர்த்து வைத்த பணமும், கண்ணுக்கு தெரியாமல் கரைந்து கொண்டிருக்கிறது. பணம் செலவாகுதே தவிர, என்ன வாங்கினோம் என்று பார்த்தால், அதுவும் கண்ணுக்கு தெரிந்து உருப்படியாக எதுவும் இருக்காது. இப்படி தான் இன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் பலரின் புலம்பலும் இருக்கிறது. ஆக நீங்களும் அப்படி ஒரு UPI மாய வலையில் சிக்காமல், உங்கள் உழைப்பின் ஊதியத்தை எப்படி காப்பாற்றுவது? இதோ சில கசப்பான உண்மைகளும், அதை சரி செய்ய தீர்வுகளும்..

Pain of Paying என்றால் என்ன?

இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் ஒரு பொருளை வாங்கும் போது, பணத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து எண்ணி கொடுப்பதில்லை, மாறாக ஒரு க்யூ-ஆர் கோடை ஸ்கேன் செய்கிறோம். இந்த எளிமையான செயல்முறைக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய ஆபத்துதான் Pain of Paying. உதாரணத்திற்கு ஒரு பொருளை 500 ரூபாய் கொடுத்து வாங்கும்போது, அதற்கான பணத்தை உங்கள் பர்ஸில் இருந்தோ அல்லது பாக்கெட்டில் இருந்தோ கொடுக்கும் போது, மூளை அதை ஒரு இழப்பாக கருதும். இதனால் பணம் கையில் இருந்து செல்லும் போது அது இனம் புரியாத ஒரு வலியை கொடுக்கும். அதுவும் அவசியம் இல்லாத செலவாக இருக்கும் போது, நிச்சயம் மனதில் ஒரு வித வலி ஏற்படும். இது உங்களை யோசித்து செலவு செய்ய வழிவகுக்கும். ஆனால் அதுவே யுபிஐ மூலம் செலுத்தும், உங்கள் கையில் இருந்து எதுவும் செல்வதில்லை. உங்கள் போனில் சில எண்களை தட்டுகிறீர்கள், அவ்வளவுதான். இதனால் மூளைக்கு நாம் பணத்தை இழக்கிறோம் என்ற எச்சரிக்கை மணி அடிப்பதில்லை. இந்த உணர்வு குறைவதால், தேவையற்ற பொருட்களை வாங்கும் வேகமும் அதிகரிக்கிறது. செலவும் அதிகரிக்கிறது.

புள்ளிவிவரங்கள் காட்டும் அதிர்ச்சி உண்மைகள்?

இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) தரவுகளின்படி, UPI பயன்பாடானது அசுர வேகத்தில் வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டை விட ஜனவரி மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் 28% அதிகரித்துள்ளன. மொத்தமாக சுமார் 2,170 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதில் ஒரு நாளைக்கு சராசரியாக 91,403 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் மாதத்தில் 90,200 கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த தரவுகள் இந்தியா டிஜிட்டல் பாதையில் வளர்ந்து வருவதை காட்டினாலும், தனிநபர்களின் சேமிப்பிற்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது என்பதும் உண்மை.

சிறிய தொகை தானே?

முன்பெல்லாம் ஏடிஎம் தேடிச் தேடி சென்று பணம் எடுத்தோம். ஆனால் இன்றெல்லாம் அப்படியில்லை. அவ்வளவு அலைய வேண்டியதும் இல்லை. அந்தளவுக்கு பணப்பரிமாற்றமும் எளிதாகிவிட்டது. ஏடிஎம்மில் காசு இல்லை, கையிலும் காசு இல்லை, இருந்தாலும் நினைத்த நேரத்தில் செலவு செய்கிறோம். சொல்லப்போனால் செலவில் ஒரு கட்டுப்பாடு என்பது போய்விட்டது. ஒரு டீ தானே, 10 ரூபாய் தானே, 20 ரூபாய் மட்டுமே என செய்யப்படும் சிறு சிறு செலவுகள் கூட, மாத இறுதியில் பார்க்கும்போது மிகப்பெரிய தொகையாக செலவாகி இருக்கும். அதுவே பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழவும் காரணமாக இருக்கும்.

UPI செலவுகளை கட்டுப்படுத்துவது எப்படி?

இன்றைய காலத்தில் யுபிஐ சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆக அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் செலவுகளை கட்டுப்படுத்த சில வழிகளை கையாளலாம். அப்படி கட்டுப்படுத்த சில டிப்ஸ்-களைத் தான் பார்க்க இருக்கிறோம்.

தினசரி வரம்பை நிர்ணம் செய்யுங்கள்: பார்த்ததற்கு எல்லாம் செலவு செய்பவராக இருந்தால், நீங்கள் உங்கள் யுபிஐ செயலியில் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் செலவு செய்வேன் என்று ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இந்த வரம்பை தாண்டி செலவு செய்யவும் முடியாது. அதுவே ஒரு எச்சரிக்கை உணர்வையும் உருவாக்கும்.

சிறு செலவுகளுக்கு பணம் கொடுங்கள் : உதாரணத்திற்கு டீ குடிப்பது, காய்கறி வாங்குவது, பால் வாங்குவது போன்ற சிறு செலவுகளுக்கு கையில் காசு கொடுத்து வாங்க பழகுங்கள். இது உங்கள் செலவை உணர வைக்கும். தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும் உதவும்.

மாதாந்திர பட்ஜெட் மற்றும் கண்காணிப்பு: ஒவ்வொரு மாதமும் ஒரு பட்ஜெட் போட்டு, வார இறுதியில் உங்கள் வங்கி ஸ்டேட்மெண்ட்டை பார்த்து தேவையற்ற செலவுகளை கண்டறியுங்கள். அது அடுத்த முறை தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும் உதவும். பணமும் மிச்சமாகும்.

உடனடி முடிவை தவிருங்கள்: ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு பொருளை பிடித்து விட்டால் உடனே யுபிஐ மூலம் பணம் செலுத்தாமல், கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த நாள் அந்த பொருள் தேவையில்லை என்று உங்களுக்கே தோன்றலாம். ஆக எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு செய்யாதீர்கள்.

தனி வங்கிக் கணக்கு: யுபிஐ செலவுகளுக்காக மட்டும் ஒரு தனி வங்கி கணக்கை வைத்துக்கொண்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் போட்டு பயன்படுத்துங்கள். இது தேவையற்ற அதிக பயன்பாட்டை குறைக்க வழிவகுக்கும். இது உங்கள் சேமிப்பையும் கரைக்காது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஒருவரின் வசதிக்கும் மிக அவசியம் தான். ஆனால் அந்த தொழில்நுட்பமே நம்மை ஆட்கொள்ள விடக்கூடாது. சரியான நிதித் திட்டமிடல் இருந்தால், டிஜிட்டல் வசதிகளையும் பயன்படுத்தி சேமிக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+