இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி தனது வாடிக்கையாளர்களுக்கு, கடன் மறுசீரமைக்கும் திட்டத்தினை அறிவித்துள்ளது.
HDFC வங்கியின் இந்த கடன் மறுசீரமைப்பு திட்டத்தினை யாரெல்லாம் பெற்றுக் கொள்ள முடியும்? எப்படி இந்த திட்டத்தில் இணைவது? இதில் எந்தெந்த கடன்களுக்கு இந்த மறுசீரமைப்பினை செய்து கொள்ள முடியும். இதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கவிருக்கிறோம்.
சரி முதலில் கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன? அதனை பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன?
பொதுவாக கடன் சீரமைப்பு என்பது கடனை செலுத்த வேண்டிய காலத்தை நீட்டிப்பது, அல்லது வட்டி விகிதத்தை குறைப்பது என இரு வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலமாக கடன் பெற்றவா்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகை குறையும். இதனால் சிக்கலில் இருக்கும் கடனாளிகள் சற்று சுலபமாக தங்கள் கடனை திருப்பிச் செலுத்துவார்கள். இதன் மூலமாக வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்காது என்பதே கடன் மறுசீரமைப்பின் நோக்கம்.
ரிசர்வ் வங்கி அனுமதி
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மார்ச் 25 முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பொது மக்கள் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை வசூலிப்பதை, மார்ச் - ஆகஸ்ட் வரை நிறுத்தி வைக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ஆனால் இதற்கான வட்டியுடன் சேர்த்து கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
யார் இந்த கடன் மறுசீரமைப்பு தகுதியானவர்?
ஸ்டாண்டர்டு என வகைப்படுத்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடன்கள் இந்த கடன் மறு சீரமைப்புக்கு தகுதியானவை தான். இவர்கள் மார்ச் 1, 2020 நிலவரப்படி, வங்கியில் 30 நாட்களுக்கு மேல் டிபால்ட்டாக இல்லாமல் இருக்க வேண்டும். ஆக அப்படி இருக்கும் அனைத்து கடன்களும் கடன் மறுசீரமைப்புக்கு தகுதியானவை தான்.
உங்களின் வங்கி கணக்கில் பரிவர்த்தனையானது, தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது வருவாய் குறைந்திருந்தால் அல்லது வருமான இழப்பு, குறைவான பணப்புழக்கம் இருந்தால் அதனை வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளும். இதனை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் கொரோனாவால் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால், அவை கடன் மறுசீரமைப்புக்கு தகுதியானவை தான்.
இவ்வாறு வருமானம் குறைவால் வாடிக்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதனை, வங்கி ஆவண அடிப்படையில் வங்கிகள் தீர்மானிக்கும். அதாவது கொரோனாவினால் வருமானம் குறைந்துள்ளதா என வங்கிகள் மதிப்பீடு செய்யும். இதெல்லாவற்றோடும் வாடிக்கையாளர்கள் இதற்கு முன்பு எப்படி கடனை திருப்பிச் செலுத்தியுள்ளார் என்பதனையும் வங்கிகள் மதிப்பீடு செய்யும். அதாவது நீங்கள் இதற்கு முன்பு எப்படி உங்களது இஎம்ஐயினை செலுத்தியுள்ளீர்கள் என்பதனை வங்கி மதிப்பீடு செய்யும். இதன் பின்னரே நீங்கள் கடன் மறுசீரமைப்புக்கு தகுதியானவரா என வங்கிகள் தீர்மானிக்கும்.
கடன் மறுசீரமைப்பு நன்மையை எப்படி பெறுவது?
நீங்கள் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, உங்களது விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த பயன்பாட்டிற்கான லிங்க் இன்னும் தரப்படவில்லை. ஆக நீங்கள் அடிக்கடி வங்கி இணையத்தளத்தில் சென்று அவ்வப்போது பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லையெனில் நீங்கள் உங்களது வங்கியின் ஆர்எம்மினை தொடர்பு கொள்ளலாம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
உங்களது தற்போதைய வேலை வாய்ப்பின் நிலை அல்லது வணிகத்தின் நிலை குறித்தான ஆவணத்தினை சமர்பிக்க வேண்டியிருக்கும். இது சம்பளதாரர்களுக்கு - சம்பள சீட்டு (pay slip) அல்லது வங்கி ஸ்டேட்மெண்டினை கொடுக்க வேண்டி இருக்கும்.
இதே சுயதொழில் செய்பவராக இருந்தால், அவர்கள் வங்கி ஸ்டேட்மெண்ட், ஜிஎஸ்டி தாக்கல், வருமான வரி தாக்கல் அல்லது உதயம் சர்டிபிகேட் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும்.
மறுசீரமைப்பின் நன்மை
உங்களது கடன் சுமையை எளிதாக்க, உங்களது கடனுக்கான திரும்ப செலுத்துவதற்கு கால அவகாசத்தினை 24 மாதங்கள் வரை நீட்டிக்கலாம். அதாவது உங்களது கடனுக்கான மீதமுள்ள இஎம்ஐ தொகையினை செலுத்த, 24 மாதங்கள் வரை அதிகபட்சம் அவகாசம் கொடுக்கப்படலாம்.
கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படுமா?
நிச்சயம் உங்கள் கடன் அறிக்கையானது கடன் பணியகத்திற்கு அனுப்பப்படும். உங்களது கடன் மறுசீரமைக்கப்பட்டது என தெரிவிக்கப்படும்.
ஒழுங்குமுறை வழிகாட்டுதல்படி, மறுசீரமைப்பு கடன் வாங்குபவரின் கடன் மறுசீரமைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட வேண்டும். ஆக நீங்கள் கடன் வாங்கியவரின் அனைத்து விபரங்களும் கடன் பணியகத்திற்கு (credit bureaus) அனுப்பப்படும். நீங்கள் ஏதேனும் ஒரே கடனுக்கு மறுசீரமைப்பை எடுத்திருந்தாலும் மறுசீரமைக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்படும்.
ஏதேனும் கட்டணம் உண்டா?
உங்கள் கடனை மறுசீரமைக்க நீங்கள் தேர்வு செய்தால் வங்கிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அது எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இதற்காக அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட கடன்கள் உள்ளது? எப்படி விண்ணப்பிப்பது?
வங்கியின் இணையத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தில் ஒன்று அல்லது அனைத்து கடன்களுக்கும் விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும். இதனை பூர்த்தி செய்து பதிவு செய்ய பின்பு, வங்கி அதனை மதிப்பீடு செய்யும். நீங்கள் கோவிட்-19 தாக்கத்தினால் உங்களது நிதி நிலைமை எப்படி இருந்தது என்பதனை மதிப்பீடு செய்து, இதன் பின்னரே உங்களது கடனுக்கு மறுசீரமைப்பு கொடுக்கலாமா? வேண்டாமா? என வங்கி தீர்மானிக்கும்.
கிரெடிட் கார்டு கடனுக்கு மறுசீரமைப்பு உண்டா?
நிச்சயம் உண்டு. உங்களது கடன்கள் உட்பட முழு கடன்களும் மறுசீரமைக்கப்பட்டு, தனி கடன் கணக்காக மாற்றப்படும். அதேபோல் உங்களது கிரெடிட் கார்டு இருப்பு அல்லது ஜம்போ லோன் இரண்டையும் மறுசீரமைத்துக் கொள்ளும் வசதி உண்டு. இதற்கு உங்களது கடன் ஆகட்டும் அல்லது கிரெடிட் கார்டு கடனாகட்டும், குறைந்தபட்சம் 25,000 ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கி இருக்க வேண்டும்.
சிறுதொழில் செய்கிறேன்? நான் தகுதியானவரா?
MSME பிரிவின் கீழ் வரும் சுயதொழில் செய்யும் நபர்கள் அல்லது நிறுவனங்கள், MSME மறுசீரமப்பிந் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். மேலும் இதனை பற்றிய முழு விவரங்களுக்கு உங்களது வங்கி ஆர்எம்-ஐ தொடர்பு கொள்ளலாம். வங்கி தனது சுயதொழில் வாடிக்கையாளர்களை எம்எஸ்எம்இ ஆக உதயம் போர்ட்டல் மூலம் https://udyamregistration.gov.in/Government-of-India/Ministry-of-MSME/online-registration.html பதிவு செய்யுமாறு கோருகிறது.
மறுசீரமைப்புக்கு இந்த கடன் தகுதியில்லை
விவசாய கடன் சங்கங்கள்
நிதி சேவை வழங்குனர்கள்
மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர்கள்
ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்ட வீட்டு நிதி நிறுவனங்களுக்கான வெளிப்பாடுகள்
விவசாய நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட தனி நபர்கள்/ நிறுவனங்களுக்கான கடன்கள்